திருக்கோவில் வைத்தியசாலையில், வெகு விரைவில் இயங்க உள்ளது




 (வி.ரி.சகாதேவராஜா)







திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் இதுவரை காலமும் இயங்காதிருந்த சத்திரசிகிச்சைக்கூடம் வெகு விரைவில் இயங்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சுமார் 140 வருட காலம் பழமை வாய்ந்த திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை கூடம் அமைக்கப்பட்டும் இதுவரையும் எந்த ஒரு சத்திர சிகிச்சையும்  இடம்பெறவில்லை.

அதற்கான உபகரணங்கள் தருவிக்கப்பட்ட போதிலும் அதில் சில தேவை நிமித்தம் நிதிப் பற்றாக்குறை காரணமாக இயங்காமல் இருந்து வந்தது .

 வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் எம்.ஏ.மசூத் எடுத்துக் கொண்ட முயற்சி காரணமாக , இயன்மருத்துவர் பிசியோதெரபிஸ்ட் கணபதிப்பிள்ளை ஹரன்ராஜ் ஏற்பாட்டில்
பிரபல சமூக செயற்பாட்டாளரும் கல்முனை ரோட்டரி கழகத்தின் முன்னாள் தலைவருமான தொழிலதிபர் பொறியியலாளர் சுந்தரலிங்கம் சசிகுமார் உதவ முன்வந்தார்.

அதற்கு ஆக 08 லட்சம் தேவை என வைத்தியசாலை சார்பில் கோரப்பட்டது.

ஆனால் தொழிலதிபர் சசிகுமார் 20 இருபது லட்ச ரூபாவை வழங்கியுள்ளார்.

சத்திர சிகிச்சை கூட இறுதிக் கட்ட தயார்படுத்தலுக்கும், இயன்மருத்துவப்பிரிவு 
அபிவிருத்திக்குமாக இந் நிதி கையளிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

அது மாத்திரமல்ல தொழிலதிபர் சசிகுமார் 
நேரடியாக வைத்திய சாலைக்கு சென்று  முற்றுமுழுதாக பார்வை இட்டதோடு குறைபாடுகளையும் கேட்டறிந்தார்.

மேலும் சமூக செயற்பாட்டாளர் சசிகுமார்  அவரது சொந்த நிதியில் இருந்து இவ் வருடத்துக்குள் 10மில்லியன் ரூபாயை தருவதாகக் கூறி அதன்  முதல் கட்டமாக 2000000 ரூபா காசோலையை வழங்கி உடனடியாக சத்திர சிகிச்சை கூடத்திற்க்கு ( Operation theater ) தேவையானதை கொள்வனவு செய்து அதை இயங்கு நிலைக்கு கொண்டு வருவருமாறு வைத்திய சாலை வைத்திய அத்தியட்சகர் மருத்துவர் மசூத்திடம் கூறினார். 

அதன் பின்னர் திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் வைத்திய அத்தியட்சகர் மருத்துவர் மசூத்தின் அழைப்பின் பேரில்  அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை நிபுணர் மற்றும் மயக்க மருந்தியல் நிபுணர் ஆகியோர் வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை கூடத்தினை பார்வையிட்டு சத்திர சிகிச்சைகளை எவ்வாறு ஒழுங்கமைப்பது பற்றியும் சத்திர சிகிச்சை கூட தேவைகள் பற்றியும் கலந்துரையாடினர்.

விரைவில் திருக்கோவில் ஆதார வைத்திய சாலையில் சத்திரசிகிச்சை கூடம் இயங்குவதற்கு தேவையான அனைத்து விடயங்களும் தற்போது  துரித கதியில் இடம் பெறுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

இது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.