பாறுக் ஷிஹான்
போதைப்பொருளை ஒழித்து இளைஞர்களுக்கான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்காக காரைதீவு பிரதேச சபைக்கு ஐக்கிய சமாதான கூட்டமைப்பு தனித்துப்போட்டியிடுவதாக அக்கட்சியின் வேட்பாளர்கள் தெரிவித்தனர்.
அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பகுதியில் அமைந்துள்ள ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் அலுவலகத்தில் 2025 ஆண்டிற்கான காரைதீவு பிரதேச சபைக்கு ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நிகழ்வு ஐக்கிய சமாதான கூட்டமைப்பு கட்சியின் உப தலைவர் கலாநிதி ஹக்கீம் செரீப் மற்றும் ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் இணைப்புச் செயலாளர் ஏ.எம். அகுவர் ஆகியோர் தலைமையில் இன்று (21) மாலை நடைபெற்ற பின்னர் விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டனர்.
மேலும் அங்கு அவர்கள் கருத்து தெரிவிக்கையில்
2025 ஆண்டிற்கான உள்ளுராட்சி மன்ற தேர்தலில் ஐக்கிய சமாதான கூட்டமைப்பானது கொழும்பு மாவட்டத்தில் கொலன்னாவ கொட்டிகாவத்தை புத்தளம் மாவட்டத்தில் கல்பிட்டி ஆனடுவ ஆராய்ச்சிகட்டு பகுதிகளிலும் திருகோணமலை மாவட்டத்தில் குச்சவெளியிலும் அம்பாறை மாவட்டத்தில் காரைதீவு பகுதியிலும் போட்டியிடுகின்றது.இத்தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்பதற்காக எமது இளைஞர்கள் இறக்கியுள்ளனர்.
இதனூடாக காரைதீவு பிரதேசசபையில் அதிகளவான ஆசனத்தை ஐக்கிய சமாதான கூட்டமைப்பு பெற்றுக்கொள்ளும்.ஊழலற்ற ஆட்சி ஒன்றினை எமது கட்சி மேற்கொள்ளும்.இந்த பிரதேசசபையின் ஊடாக உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.மாற்றம் என்பது எங்களை ஏமாற்றிவிடக் கூடாது.ஒரு மாற்றத்தில் வருகின்றவர்களின் பின்புலம் பலமானதாக இருக்க வேண்டும்.இத்தேர்தலில் ஊழலற்ற ஏமாற்றத்திற்கு எதிரான செயற்பாட்டை சரியாக செய்யக்கூடிய பொதுச்சேவைகளை செய்கின்ற இளைஞர்கள் முன்வந்து போட்டியிடுகின்றனர்.
எதிர்காலத்தில் மாளிகைக்காடு மாவடிப்பள்ளி உள்ளிட்ட காரைதீவு பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் மக்கள் நலன் கருதி பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும்.இரு சமூகம் சார்ந்த பிரதேச சபையாக காரைதீவு பிரதேச சபை இருப்பதனால் எமது ஐக்கிய சமாதான கூட்டமைப்பு கட்சி ஊடாக ஐக்கிய சமாதானத்தை ஏற்படுத்தி பாரிய அபிவிருத்தியை ஏற்படுத்துவதுடன் போதைப்பொருளை ஒழித்து இளைஞர்களுக்கான வேலைத்திட்டங்களை முன்னெடுப்போம் என குறிப்பிட்டனர்.
Post a Comment