305 ரன் இலக்கை ஊதித் தள்ளியது, இந்தியா




 


ரோஹித் சர்மாவின் அற்புதமான சதத்தால் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது இந்திய அணி.


ஒடிசா மாநிலம் கட்டாக்கில் நேற்று பகலிரவாக நடந்த 2வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்திய அணி.


முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 49.5 ஓவர்களில் 304 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 305 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 33 பந்துகள் மீதமிருக்கையில் 6 விக்கெட் இழப்புக்கு 308 ரன்கள் சேர்த்து, 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.


இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2-0 என்ற கணக்கில் இந்திய அணி வென்று ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது. இதன் மூலம், இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிராக 10-வது சர்வதேச தொடரை வென்றுள்ளது. ரோஹித் சர்மா அதிரடி சதத்தால் மிகப்பெரிய இலக்கை இந்தியா எளிதில் எட்டியது எப்படி?



சொதப்பிய இங்கிலாந்து அணி

டாஸ் வென்ற இங்கிலாந்து அணிக்கு பென் டக்கெட், பில் சால்ட் அருமையான தொடக்கம் அளித்தனர். பவர்ப்ளே முடிவில் 80 ரன்களுக்கு மேல் குவித்து வலுவான அடித்தளம் அமைத்தனர். சால்ட் 26 ரன்களில் வருண் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். பென் டக்கெட் அரைசதம் அடித்து 65 ரன்களில் ஜடேஜா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.


3-வது விக்கெட்டுக்கு ஜோ ரூட், ஹேரி ப்ரூக் கூட்டணி ஓரளவுக்கு நிலைத்து ஆடி ஸ்கோரை உயர்த்தி 66 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். ஹேரி ப்ரூக் 31 ரன்னில் ராணா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.


அடுத்துவந்த கேப்டன் பட்லர், ஜோ ரூட்டுடன் சேர்ந்து 51 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார். ஜோ ரூட் 60 பந்துகளில் அரைசதம் எட்டினார். பட்லர் 34 ரன்களில் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார்.


இங்கிலாந்து அணி பேட்டிங் செய்ததைப் பார்த்தபோது 330 ரன்களை எட்டிவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடைசி 85 ரன்களுக்குள் 7 விக்கெட்டுகளை இழந்து 304 ரன்களில் ஆட்டமிழந்தது. லிவிங்ஸ்டன் கடைசி நேரத்தில் கேமியோ ஆடி 32 பந்துகளில் 2 பெரிய சிக்ஸர்கள் உள்பட 41 ரன்கள் சேர்த்தார்.


IND vs ENG: கோலி வருகையால் ஸ்ரேயாஸ் நீக்கம்? - ஆடுகளம் யாருக்கு சாதகம்?

9 பிப்ரவரி 2025

ரொனால்டோ: உலகின் சிறந்த கால்பந்து வீரரா? தமிழக, கேரள கால்பந்து ரசிகர்கள் சொல்வது என்ன?

5 பிப்ரவரி 2025

இந்தியா - இங்கிலாந்து, 2-வது ஒருநாள் போட்டிபட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,ஜோ ரூட் 60 பந்துகளில் அரைசதம் எட்டினார்.

இந்திய அணியும் பல வாய்ப்புகளை இழந்தது. பில் சால்ட் 12 ரன்களில் இருந்தபோது கொடுத்த கேட்சை அக்ஸர் படேல் நழுவவிட்டார், ரூட் 16 ரன்களில் இருந்த போது அக்ஸர் பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கினார், இதற்கு அப்பீல் செய்திருந்தால் அவுட் கிடைத்திருக்கும். ஆனால், கேப்டன் ரோஹித் டிஆர்எஸ் முடிவை எடுக்கவில்லை. இதுபோன்ற வாய்ப்புகள் கிடைத்தும் அதை இங்கிலாந்து பயன்படுத்தவில்லை.


30 நிமிடங்கள் ஆட்டம் நிறுத்தம்

இந்திய அணி சேஸிங்கில் ஈடுபட்டு நல்ல ஃபார்மில் இருந்தது. 6.1 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 48 ரன்கள் சேர்த்திருந்தது இந்திய அணி. அப்போது மின்விளக்கில் திடீரென பழுது ஏற்பட்டு, ஒருபகுதி மின்விளக்குகள் சரியாக எரியவில்லை. இதனால் போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தால் ஆட்டம் நிறுத்தப்பட்டு 30 நிமிடங்களுக்குப் பிறகு மீண்டும் தொடங்கியது.


இந்தியா - இங்கிலாந்து, 2-வது ஒருநாள் போட்டிபட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தால் ஆட்டம் நிறுத்தப்பட்டு 30 நிமிடங்களுக்குப் பிறகு மீண்டும் தொடங்கியது.

ரோஹித் சர்மாவின் அதிரடி ஆட்டம்

ரோஹித் சர்மா, தன் ஃபார்ம் மீது இதுவரை சந்தேகம் எழுப்பியவர்களை, இந்த ஒரே ஆட்டத்தின் மூலம் அமைதி ஆக்கிவிட்டார். அடுத்த வாரம் தொடங்க இருக்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில், அணியை வழிநடத்த தனக்கு தகுதி இருக்கிறது என்பதை ரோஹித் சர்மா ஒரே ஆட்டத்தில் நிரூபித்தார்.


கடந்த ஆட்டத்தில் பேட்டில் எட்ஜ் எடுத்து ரோஹித் சர்மா ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில், தொடக்கத்தில் நிதானமாக பேட் செய்து அட்கின்சன் பந்துவீச்சில் டீப் தேர்டு திசையில் ரோஹித் பவுண்டரி அடித்தபின் இயல்பான ஆட்டத்தை ஆடத் தொடங்கினார். மெஹ்மூத் முதல் ஓவரை கட்டுக்கோப்பாக வீசிய நிலையில் அடுத்த ஓவரில் ரோஹித் சர்மாவின் பேட்டுக்கு பதில் சொல்ல முடியாமல் சிக்ஸர்களை வாரிக்கொடுத்துச் சென்றார்.


அதில் ரஷித் ஓவரில் நிதானமாக ஆடிய ரோஹித் சர்மா 2 பவுண்டரிகளை விளாசி 30 பந்துகளில் அரைசதத்தை விளாசினார். அதன்பின் பொறுமையாக பேட் செய்யத் தொடங்கினார். 30 பந்துகளில் அரைசதம் எட்டிய ரோஹித், அடுத்த 50 ரன்களை 46 பந்துகளில் நிதானமாகச் சேர்த்து 32வது சதத்தை நிறைவு செய்தார்.


ரோஹித் சர்மா இழந்த ஃபார்மை மீட்டு சாம்பியன்ஸ் டிராபிக்கு தயாராகி இருப்பது மற்ற அணிகளுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக, சவாலாகவும் இருக்கும். அடுத்ததாக இந்திய அணிக்கு மிகப்பெரிய கவலை விராட் கோலியின் ஃபார்ம்தான்.


IND vs SA: 19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக் கோப்பையை இந்தியா வென்றது எப்படி?

3 பிப்ரவரி 2025

டி20 தொடரை வென்ற இந்தியா; அபிஷேக் சர்மாவின் ரன்களை கூட எடுக்க முடியாமல் இங்கிலாந்து தோற்றது எப்படி?

3 பிப்ரவரி 2025

இந்தியா - இங்கிலாந்து, 2-வது ஒருநாள் போட்டிபட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,ரோஹித் சர்மா, தன் ஃபார்ம் மீது இதுவரை சந்தேகம் எழுப்பியவர்களை, இந்த ஒரே ஆட்டத்தின் மூலம் அமைதி ஆக்கிவிட்டார்.

கில், ஸ்ரேயாஸ் பொறுப்பான ஆட்டம்

ரோஹித் சர்மாவுடன் இணைந்து ஆட்டத்தைத் தொடங்கிய சுப்மான் கில் மிகுந்த பொறுப்பான ஆட்டத்தை ஆடி, தொடர்ந்து 2வது அரை சதத்தைப் பதிவு செய்தார். 45 பந்துகளில் அரைசதம் அடித்த சுப்மான் கில் 60 ரன்கள் சேர்த்த நிலையில் ஓவர்டன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு ரோஹித்- கில் கூட்டணி 136 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர்.


ஸ்ரேயாஸ் அய்யர், அணியில் இருந்து நீக்கப்படலாம் என்று சந்தேகங்கள் எழுப்பிய நிலையில் அவர் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தினார். ரோஹித் சர்மாவுடன் இணைந்து 70 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை ஸ்ரேயாஸ் ஏற்படுத்தி 6 ரன்களில் 2வது அரைசதத்தை தவறவிட்டார். ஸ்ரேயாஸ் 44 ரன்களில் ரன்அவுட் ஆனார்.


இந்திய அணியின் நடுவரிசை பேட்டிங்கும் மெல்ல ஸ்திரப்பட்டு வருகிறது. இரு ஆட்டங்களிலும் ஸ்ரேயாஸ் பேட்டிங் அதற்கான நம்பிக்கையை அளித்து வருகிறது.


பந்துவீச்சிலும் 7 பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்தியும் இந்திய பேட்டர்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அதில் ரஷீத் பந்துவீச்சு கட்டுக்கோப்பாக இருந்தாலும், அவரால் பெரிதாக சாதிக்க முடியவில்லை. வேகப்பந்துவீச்சில் அட்கின்சன், மார்க்உட் இருவருமே ரன்களை வழங்கினர். லிவிங்ஸ்டன் மட்டும் 7 ஓவர்கள் வீசி 29 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தி சிக்கனமாகப் பந்துவீசினார்.


இந்தியா - இங்கிலாந்து, 2-வது ஒருநாள் போட்டிபட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,ரோஹித்- கில் கூட்டணி 136 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்துக் கொடுத்தது.

ஆல்ரவுண்டராக மாறும் அக்ஸர் படேல்

அக்ஸர் படேல் சுழற்பந்துவீச்சு மட்டுமல்ல, டெஸ்ட், ஒருநாள், டி20 போட்டிகளிலும் சிறப்பாக பேட் செய்ய முடியும் என்று தன்னை வெளிப்படுத்தி வருகிறார். கடந்த ஆட்டத்தில் முதல் அரைசதத்தை நிறைவு செய்த அக்ஸர், இந்தப் போட்டியில் 41 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஒரு பந்துவீச்சாளராக அறிமுகமாகிய அக்ஸர் படேல் ஆல்ரவுண்டராக மாறிவருவது இந்திய அணிக்கு பெரிய பலமாகும்.


விளையாட்டுத் துறையில் இந்திய வீராங்கனைகள் பதக்கங்களை குவிப்பதை நிதிப் பற்றாக்குறை தடுக்கிறதா?

31 ஜனவரி 2025

கபடியால் மாறிய வாழ்க்கை - ஒரு கிராமத்துப் பெண்களின் நெகிழ்ச்சி கதை

27 ஜனவரி 2025

ரோஹித் சர்மா- புதிய மைல்கல்

இந்த ஆட்டத்தில் 30 பந்துகளில் அரைசதத்தையும், 76 பந்துகளில் சதம் அடித்து, 90 பந்துகளில் 119 ரன்கள் (7 சிக்ஸர், 12 பவுண்டரி) சேர்த்து ஆட்டமிழந்த கேப்டன் ரோஹித் சர்மா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். ரோஹித் சர்மா தனது ஒருநாள் போட்டி வாழ்க்கையில் 32-வது சதத்தை இன்று பதிவு செய்தார்.


கடந்த 2023ம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்குப் பின் ரோஹித் சர்மா பங்கேற்ற 5வது ஒருநாள் போட்டியாகும். இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 2 அரைசதங்களை அடித்திருந்தாலும், சதம் அடிக்கவில்லை. உலகக் கோப்பைத் தொடரில் ரோஹித் சர்மா சதம் அடித்தபின், ஏறக்குறைய ஒன்றறை ஆண்டுகளுக்குப்பின் தற்போது சதம் அடித்துள்ளார்.


அது மட்டுமல்லாமல் ரோஹித் சர்மா இந்த ஆட்டத்தில் 7 சிக்ஸர்கள் விளாசினார். இதன் மூலம் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்த பேட்டர்கள் வரிசையில் கிறிஸ் கெயில் (331) சாதனையை முறியடித்து 338 சிக்ஸர்கள் விளாசி, ரோஹித் சர்மா 2வது இடத்தைப் பிடித்தார். பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி 351 சிக்ஸர்களுடன் முதலிடத்தில் உள்ளார்.


அது மட்டுமல்லாமல் ஒருநாள் போட்டிகளில் அதிக சதங்களை விளாசிய இந்திய பேட்டர்களில் ரோஹித் சர்மா 32 சதங்களுடன் 3வது இடத்தில் உள்ளார். முதலிடத்தில் கோலி 50 சதங்களுடனும், 2வது இடத்தில் உள்ள சச்சின் டெண்டுல்கர் 49 சதங்களுடனும் உள்ளனர்.


இந்தியா - இங்கிலாந்து, 2-வது ஒருநாள் போட்டிபட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,ரோஹித் சர்மா இந்த ஆட்டத்தில் 7 சிக்ஸர்கள் விளாசினார்.

வருணின் முதிர்ந்த அறிமுகம்

தமிழகத்தைச் சேர்ந்த வருண் சக்ரவர்த்தி தனது முதல் ஒருநாள் போட்டியில் அறிமுகமானார். தற்போது வருணுக்கு 33 வயது 164 நாட்களாகிறது. அதிகமான வயதில் ஒருநாள் போட்டியில் அறிமுகமாகிய 2வது வீரர் என்ற பெருமையை வருண் பெற்றார். இதற்கு முன், பரூக் எஞ்சினியர் 36-வது வயது 138 நாட்களாக இருந்தபோது ஒருநாள் தொடரில் அறிமுகமாகினார்.