சங்கு வேட்பாளர் லிங்கேஸ்வரன் வேண்டுகோள்







 ( வி.ரி.சகாதேவராஜா)


1995 க்கு பிற்பாடு பிறந்த வாலிப வாக்காளர்கள் இம்முறை தேசிய அரசியலின் பக்கம் இருப்பதாக கூறப்படுகிறது.இது ஏனைய மாவட்டங்களுக்கு அல்லது ஏனைய இனங்களுக்கு பொருத்தலாம்.ஆனால் அம்பாறை மாவட்ட தமிழ் வாலிப வாக்காளர்களுக்கு ஒருபோதும் பொருந்தாது.இதனையிட்டு அவர்கள் சிந்திக்க வேண்டும்.

 இவ்வாறு ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் அம்பாறை மாவட்ட வேட்பாளரும் கல்முனைஐக்கிய வணிக சங்கத் தலைவரும் பாண்டிருப்பு அனைத்து ஆலயங்களின் ஒன்றிய நிர்வாகசபை உறுப்பினருமான  கிருஷ்ணபிள்ளை லிங்கேஸ்வரன் தெரிவித்தார்.

அவரது ஊடகச் சந்திப்பு காரைதீவில் உள்ள அம்பாறை ஊடக அமையத்தில் இன்று (24) வியாழக்கிழமை இடம்பெற்றது .

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்..

 அம்பாறை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி ஒரு வேளை மூன்று ஆசனங்கள் எடுத்தாலும்  அந்த அணியில் கேட்கின்ற தமிழர் ஒரு போதும் வரவே முடியாது . அப்படி வந்தாலும் அவரால் தமிழருக்காக குரல் கொடுக்கவும் முடியாது. அபிவிருத்தி செய்யவும் முடியாது. எனவே அவர்களுக்கு அளிக்கும் உங்களது வாக்குகள்  தமிழ் மகனை வர வைக்க போவதில்லை. மாறாக மாற்றின பிரதிநிதியைத்தான் வரவைக்கும் என்பதை தமிழ் வாலிப வாக்காளர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் . எனவே பொன்னான வாக்குகளை வீணாக்காமல் வெற்றி பெறும் அணிக்கு வாக்களித்து தமிழ் பிரதிநிதி வர ஒத்துழைப்பு நல்குங்கள்.


கடந்த முறை தமிழ் பிரதிநிதித்துவம் அம்பாறை மாவட்டத்தில் இழக்கப்பட்டதற்கு கருணா காரணம் இல்லை .கூட வாக்கெடுப்பதை விட குறைவாக வாக்கெடுத்து வாக்குகளை பிரிப்பவன் தான் அதற்கு காரணமாக இருக்க முடியும்.

 அப்படிப் பார்த்தால் 1994 ஆம் ஆண்டிலே மாவை சேனாதிராசா இங்கு வந்து பிரதிநிதித்துவத்தை இழக்கச் செய்தார். இதனை தமிழரசுக் கட்சி ஏற்றுக்கொள்ள வேண்டும் .

நாங்கள் திருகோணமலை மாவட்டத்திலே சம்பந்தன் பிறந்த நகர் என்பதால் அங்கு வீட்டுக்கு விட்டுக்கொடுத்தோம். ஆனால் அம்பாறை மாவட்டத்தில் அவர்கள் தேவையற்ற சாட்டுகளை சொல்லி ஒற்றுமையில் இருந்து தவறி விட்டார்கள். அதன் விளைவாக நாங்கள் சங்குச் சின்னத்தில் கேட்க நிர்ப்பந்திக்கப்பட்டோம்.
 
கடந்த காலங்களில் இந் தமிழரசுக் கட்சி அம்பாறை மாவட்ட தமிழர்களுக்கு செய்த துரோகம் கொஞ்சம் நெஞ்சம் இல்லை.
 2015இல் கிழக்கு மாகாண சபையை தாரை வார்த்து கொடுத்தது.
 2019ல் நாம் உண்ணாவிரதம் இருந்த போது எத்தனையோ பொன்னான வாய்ப்புகள்  இருந்தும் கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை வேண்டும் என்று கிடப்பில் போட்டது.
இவை எல்லாம் வரலாற்றில் அழிக்க முடியாத துரோகங்கள் .
இன்று அவர்கள் புனிதர்களாக வலம் வருவதாக கூறுகிறார்கள் .

புதிய அரசாங்கம் ஊழலை இல்லாத ஒழிக்க வேண்டும் என்று செயற்பட்டு வருகின்றது. அதைத்தான் நானும் விரும்புகிறேன்.
சட்டம் அதன் கடமையை செய்கின்றது. நேற்று ஜோன்சன் பெர்ணான்டோ கைது செய்யப்பட்டார். பிள்ளையான் 588 கோடி ஊழல் செய்ததாக கூறப்படுகிறது .தமிழ் மக்களுக்கு குறிப்பாக கல்முனை தமிழர்களுக்கு துரோகம் செய்தவர் வியாழேந்திரன். அவர் பெரிய ஊழல்வாதி. 3 வருடத்தில் பாரிய சொத்து சேர்த்தவர். எல்லாம் சட்டத்தின் முன்னிறுத்தப்படும் காலம் தொலைவில் இல்லை .

எனவே கடந்த காலங்களிலே 2500க்கும் குறைவான வாக்குகளை பெற்று மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களை அல்லது அந்த கட்சிகளை நீங்கள் அடியோடு மறந்து விடுங்கள். அவர்களை இம்முறை நிராகரியுங்கள்.

 நீங்கள் விரும்பினால்   சங்குக்கு வாக்களியுங்கள் அல்லது வீட்டுக்கு வாக்களியுங்கள்.

ஒருவேளை அம்பாறை மாவட்டத்தில் தமிழர்களின் பிரதிநிதித்துவம் இழக்கப்படுமாக இருந்தால் அதற்கு காரணம் எந்த அணி மிகக்கூடுதலான வாக்குகளை பெறுகின்ற அல்லது வெற்றி பெறுகின்ற அணியை விட ஒரு வாக்குத்தானும் குறைவாக எடுக்கின்றதோ அந்த அணிதான் அதனை பொறுப்பெடுக்க வேண்டும். அது வீடாக இருக்கலாம் 
சங்காக இருக்கலாம். சங்கு என்றால் முதலில் அந்தப் பொறுப்பை கிருஷ்ணபிள்ளை லிங்கேஸ்வரனாகிய நான் ஏற்றுக் கொள்வேன். என்றார்.