சுவாமி விபுலானந்தரின் துறவற நூற்றாண்டு விழாவும் பாடசாலை மாணவர்களுக்கான பஞ்சபுராண சுடர் விருது வழங்கும் நிகழ்வும்




 


வி.சுகிர்தகுமார்   



இந்து சமய கலாசார திணைக்களத்தின் அனுசரணையுடன் அக்கரைப்பற்று இந்து இளைஞர் மன்றத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற சுவாமி விபுலானந்தரின் துறவற நூற்றாண்டு விழாவும் பாடசாலை மாணவர்களுக்கான பஞ்சபுராண சுடர் விருது வழங்கும் நிகழ்வும் (19) அக்கரைப்பற்று இந்து இளைஞர் மன்ற கட்டடத்தில் இடம்பெற்றது.
இந்து இளைஞர் மன்றத்தின் தலைவரும் இறைபணிச்செம்மலுமான த.கயிலாயபிள்ளையின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வுகளில் பிரதம அதிதியாக அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஜெகராஜன் மற்றும் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் ஆலையடிவேம்பு கோட்டக்கல்விப்பணிப்பாளர் கீ.கமலமோகனதாசன் அம்பாரை மாவட்ட கலாசார உத்தியோகத்தர் கு.ஜெயராஜி உள்ளிட்ட சமய சமூக தலைவர்கள் பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்வை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட ஊர்வலமும் சுவாமி விபுலானந்தரின் திருவுருவப்படத்தை தாங்கிய பவனியும் அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ண தேசிய பாடசாலையின் முன்பாக இருந்து ஆரம்பமானது.
சுவாமி விபுலானந்தரின் உருவப்படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டதுடன் மாணவர்களின் நடன கலை நிகழ்வுகளுடன ஊர்வலம் ஆரம்பமாகி இந்து இளைஞர் மன்ற மண்டபத்தை வந்தடைந்தது.
அங்கு சுவாமி விபுலானந்தரின் திருவுருவப்படம் திரை நீக்கம் செய்து வைக்கப்பட்டு சுவாமியின் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு பூஜைகளும் சிவஸ்ரீ புண்ணியகிருஸ்ண குமாரக்குருக்களினால் நடாத்தப்பட்டது.
இதன் பின்னராக மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் பஞ்சபுராணத்தை பண்ணுடன் ஓதி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பஞ்சபுராணசுடர் விருதும் பொற்கிழியும் வழங்கப்பட்டதுடன் கலந்து கொண்ட மாணவர்கள் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
நிகழ்வில் விபுலானந்தரின் சிறப்பு பற்றி மாணவர்கள் உள்ளிட்டவர்களினால் உரை நிகழ்த்தப்பட்டதுடன் பஞ்ச புராண போட்டியினை மாணவர்களிடையே அறிமுகப்படுத்திய அக்கரைப்பற்று இந்து இளைஞர் மன்றத்தை அனைவரும் பாராட்டி பேசினர்.
இதேநேரம் த.கயிலாயபிள்ளை தமிழ் இலக்கிய பேரவையினால் பொன்னாடை போர்த்தி வாழ்த்துப்பா வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் அதிதிகளும் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.