கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோதுண்டு இளைஞன் உயிரிழப்பு




 

(ஏறாவூர் நஸீர்-ISD)

இன்று (24/10) இரவு மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இரவு நேர கடுகதி புகையிரதத்தில், ஏறாவூரில் வைத்து இளைஞர் ஒருவர் மோதுண்டு மரணித்துள்ளார்.
புகையிரதம் வந்து கொண்டிருக்கும் போது, குறித்த இளைஞன் புகையிரதப் பாதையில் அமர்ந்திருந்ததாகவும், பாரிய ஒலி எழுப்பியபோதும் அசையாமல் இருந்ததாகவும் புகையிரத இயக்குணர் தெரிவித்தார்.
மரணமடைந்த இளைஞனை அதே புகையிரதத்தில் ஏற்றிக்கொண்டு ஏறாவூர் புகையிரத நிலையத்தில் ஒப்படைத்த பின்னர், பிரேதத்தை பார்வையிடச் சென்ற சன நெரிசலுக்குள் ஒரு இளைஞன் மாத்திரம் "இவர் எனது நானா" என சத்தமிட்டு அழுது அடையாளங்காட்டினார்.
மேலும் இவர் ஒரு மனநோயாளி என்றும் தெரிவித்தார்.
மரணமானவர் ஏறாவூர், அக்பர் பள்ளி வீதி, ஐயங்கேணி காட்டுமாமரத்தடி பிரதேசத்தை சேர்ந்த முகம்மது நுழார் முகம்மது முஜாஹித் (32) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
ஏறாவூர் பொலிசாரின் அழைப்புக்கு அமைய. சம்பவ இடத்துக்கு சென்ற திடீர் மரண விசாரணை அதிகாரி MSM.நஸீர் ஜனாசாவை பார்வையுற்று விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் உடற்கூற்று பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தார்.
மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர் .
நாளை (25/10) உடற்கூற்று பரிசோதனை முடிவடைந்ததும் ஜனாஸா உறவுகளிடம் ஒப்படைக்கப்படும்.