'ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டார்'




 



ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் காஸாவில் இன்று (வியாழன், அக்டோபர் 17) கொல்லப்பட்டதாக இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்துள்ளார்.


ஹமாஸ் தலைவர் இஸ்ரேலியப் படையினரால் கொல்லப்பட்டதாக அவர் கூறியிருக்கிறார். சின்வாரை அவர் ‘படுகொலை மற்றும் அட்டூழியங்களுக்குப் பின்னால் இருந்த மூளை’ என்று வர்ணித்தார்.


மேலும் "இது இஸ்ரேலுக்கு ஒரு குறிப்பிடத்தக்க ராணுவ மற்றும் தார்மீக சாதனை. ஈரான் தலைமையிலான தீவிர இஸ்லாத்தின் தீய அச்சுக்கு எதிராக முழு சுதந்திர உலகிற்கும் கிடைத்த வெற்றி,” என்றார் காட்ஸ்.


"சின்வாரைக் கொன்றது பணயக்கைதிகளை உடனடியாக விடுவிக்கும் வாய்ப்பைத் திறக்கிறது. இது காஸாவில் ஹமாஸ், மற்றும் இரானின் கட்டுப்பாடு இல்லாத ஒரு புதிய மாற்று யதார்த்தத்திற்கு வழி வகுக்கும்,” என்றார்.


முன்னதாக, ஹமாஸ் ஆயுதக்குழுவின் தலைவர் யாஹ்யா சின்வார் காஸாவில் கொல்லப்பட்டாரா என்பதற்கான ‘சாத்தியக்கூறுகளைச் சரிபார்த்து வருவதாக’ இஸ்ரேல் ராணுவம் தெரிவித்திருந்தது.


இது ஹமாஸ் ஆயுதக்குழுவுக்கு மிகப்பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.



‘ஒரு வருடகால தேடுதல்’

இஸ்ரேல் பாதுகாப்புப் படை வெளியிட்ட அறிக்கையில், ‘ஒரு வருடகால தேடுதலுக்குப்’ பிறகு நேற்று (அக்டோபர் 16) காஸாவின் தெற்குப் பகுதியில் நடத்தப்பட்ட ஒரு தாக்குதலில் சின்வார் கொல்லப்பட்டார்’, என்று கூறப்பட்டுள்ளது.


சின்வார் இன்று (அக்டோபர் 17) கொல்லப்பட்டதாக இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் கூறியதை அடுத்து இது வந்துள்ளது. இந்த முரண்பாட்டிற்கான காரணம் தெளிவாக இல்லை.


இஸ்ரேல் பாதுகாப்புப் படை, தனது அறிக்கையில், சின்வார் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி நடந்த தாக்குதலைத் திட்டமிட்டு செயல்படுத்தியதாகவும், ‘பல இஸ்ரேலியர்களின் கொலை மற்றும் கடத்தலுக்குப் பொறுப்பானவர்’ என்றும் கூறுயிருக்கிறது.


"காஸா பகுதியில் உள்ள ஹமாஸ் சுரங்கப்பாதைகளில், தரைக்கு மேலேயும் கீழேயும் காஸாவின் பொதுமக்களுக்குப் பின்னால் மறைந்திருந்த யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டார்," என்று அது கூறுகிறது.


ஹமாஸின் மூத்த உறுப்பினர்களது சந்தேகத்திற்கிடமான இடங்களைச் சுட்டிக் காட்டிய உளவுத் தகவலைத் தொடர்ந்து தெற்கு காஸாவில் தாக்குதல் நடத்தி வருவதாக இஸ்ரேலிய ராணுவம் கூறுகிறது.


அப்பகுதியில் இயங்கி வரும் 828-வது படைப்பிரிவைச் சேர்ந்த இஸ்ரேலிய வீரர்கள் ‘மூன்று பயங்கரவாதிகளை அடையாளம் கண்டு கொன்றனர்’ என்று இஸ்ரேலிய ராணுவம் கூறுகிறது. கொல்லப்பட்டவர்களில் ஒருவர் சின்வார் என்பதை உறுதிப்படுத்தியது.


கட்டபொம்மன் ஒரு தெலுங்கர், கொள்ளைக்காரர் என்கிற வாதங்கள் சரியா?வரலாற்று திரிபுகளும் உண்மைகளும்

16 அக்டோபர் 2024

இரண்டாம் உலகப்போரில் பிரிட்டன் வெற்றிக்காக தமிழ்நாட்டில் நினைவுச்சின்னம் அமைத்த முஸ்லிம் வணிகர் - எங்கே?

14 அக்டோபர் 2024

ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார்பட மூலாதாரம்,Reuters

யார் இந்த யாஹ்யா சின்வார்?

2023-ஆம் ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி இஸ்ரேலில் ஹமாஸ் ஆயுதக்குழு நடத்திய தாக்குதலில், 1,200 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 200-க்கும் மேற்பட்டோர் பணயக்கைதிகளாக கொண்டு செல்லப்பட்டனர். இதற்கு காரணமானவர்களில் ஒருவராக யாஹ்யா சின்வாரை இஸ்ரேல் குற்றம்சாட்டி வந்தது.


இவர் காஸா பகுதியின் தெற்கு முனையில் உள்ள கான் யூனிஸ் அகதிகள் முகாமில் பிறந்தார். 62 வயதாகும் யாஹ்யா சின்வார், அபு இப்ராஹிம் என்று பரவலாக அறியப்படுகிறார்.பாலத்தீனர்கள் ‘அல்-நக்பா’ (பேரழிவு) என்று அழைக்கும் சம்பவத்திற்குப் பிறகு அவரது குடும்பம் அகதிகளானார்கள்.


1948 ஆம் ஆண்டு நடந்த இந்தச் சம்பவத்திற்கு பிறகு இஸ்ரேல் என்ற நாடு உருவானது. அதைத் தொடர்ந்து நடந்த போரில் பாலத்தீனர்கள் அவர்களின் மூதாதையர் வீடுகளில் இருந்து பெருமளவில் இடம்பெயர்ந்தனர்.


சின்வார் முதன்முதலாக 1982 ஆம் ஆண்டு, அவரது 19-வது வயதில் இஸ்ரேலால் கைது செய்யப்பட்டார். பின்னர் மீண்டும் 1985 ஆம் ஆண்டு கைதான போது ஹமாஸின் நிறுவனர் ஷேக் அகமது யாசினின் நம்பிக்கையைப் பெற்றார்.


இருவரும் ‘மிகமிக நெருக்கமானார்கள்’ என்று டெல் அவிவில் உள்ள தேசியப் பாதுகாப்பு ஆய்வுகள் நிறுவனத்தின் மூத்த ஆராய்ச்சியாளர் கோபி மைக்கேல் கூறுகிறார். அமைப்பின் ஆன்மீகத் தலைவருடனான இந்த உறவு பின்னர் சின்வாருக்கு இயக்கத்திற்குள் ஒரு முக்கியத்துவத்தைக் கொடுத்தது, என்கிறார் அவர்.


ஹமாஸ் 1987ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, சின்வார் அக்குழுவின் பயங்கரமான உள்நாட்டுப் பாதுகாப்பு அமைப்பான அல்-மஜ்தை நிறுவினார்.


1988 ஆம் ஆண்டு சின்வார் இரண்டு இஸ்ரேலிய வீரர்களைக் கடத்திச் சென்று கொல்ல திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது. அதே ஆண்டு அவர் கைது செய்யப்பட்டார். 12 பாலத்தீனர்களைக் கொன்றதற்காக இஸ்ரேலால் தண்டிக்கப்பட்டார். அவருக்கு நான்கு ஆயுள் தண்டனைகள் விதிக்கப்பட்டன.


காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் எப்போது புயலாக மாறும் தெரியுமா? எளிய விளக்கம்

17 அக்டோபர் 2024

தமிழ்நாடு: புயல், மழை தொடர்பாக அவசியம் அறிய வேண்டிய முக்கிய அறிவியல் சொற்கள்

17 அக்டோபர் 2024

சின்வார் பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,எகிப்த்தில் சின்வார் (படத்தின் நடுவே இருப்பவர்), 2017-இல் எடுக்கப்பட்ட படம்

'மக்கள் அவரைப் பார்த்து பயந்தார்கள்'

சின்வார் தனது வாழ்வில் 22 ஆண்டுகளுக்கும் மேலாக இஸ்ரேலிய சிறைகளில் கழித்துள்ளார்.


அவர் 2011-ஆம் ஆண்டு ஒரு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக விடுவிக்கப்பட்டார். அதில் 1,027 பாலத்தீன மற்றும் இஸ்ரேலிய அரேபிய கைதிகள், ஒரே ஒரு இஸ்ரேலிய பணயக்கைதியான இஸ்ரேல் ராணுவ வீரர் கிலாட் ஷாலிட்டிற்கு ஈடாக சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.


ஹமாஸின் மூத்த இராணுவத் தளபதியான சின்வாரின் சகோதரரால் கடத்தப்பட்டு ஐந்து வருடங்களாக ஷாலித் சிறைபிடிக்கப்பட்டிருந்தார்.


இதன் பிறகு அவர் காஸாவிற்கு திரும்பியதும், உடனடியாக ஒரு தலைவராக ஏற்றுக்கொள்ளப்பட்டார், என்று கோபி மைக்கேல் கூறுகிறார்.


ஆனால், "மக்கள் அவரைப் பார்த்து பயந்தார்கள். அவர் மிகவும் கொடூரமானவர்," என்றும் கோபி மைக்கேல் கூறுகிறார்.


சிறையை விட்டு வெளியேறிய உடனேயே, சின்வார் இஸ்ஸெடின் அல்-கஸ்ஸாம் படை மற்றும் அதன் தலைமைப் பணியாளர் மர்வான் இசாவுடன் ஒரு கூட்டணியை உருவாக்கினார் என்று வாஷிங்டன் மையத்தின் ஆராய்ச்சியாளர் எஹுட் யாரி கூறுகிறார்.


2013-ஆம் ஆண்டு, அவர் காஸா பகுதியில் உள்ள ஹமாஸின் அரசியல் பணியகத்தின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார், 2017-ஆம் ஆண்டு அவர் அதன் தலைவராக ஆனார்.



ஹமாஸ் குழுவின் தலைவர்

சின்வாரின் இரக்கமற்ற தன்மை மற்றும் வன்முறைப் போக்கு ‘கான் யூனிஸின் கசாப்புக்காரன்’ என்ற புனைப்பெயரை அவருக்குப் பெற்றுத் தந்தது.


இஸ்ரேலின் பாதுகாப்பு மற்றும் காவல் அமைப்பில் உள்ள பலர், கைதிகள் பரிமாற்றத்தின் ஒரு பகுதியாக சின்வாரை சிறையில் இருந்து வெளியேற்றியது மிகப்பெரிய தவறு என்று கருதுகிறார்கள்.


2015-ஆம் ஆண்டில், அமெரிக்க வெளியுறவுத்துறை, சின்வாரை ‘உலகளாவிய பயங்கரவாதி’ என்று அதிகாரப்பூர்வமாக வகைப்படுத்தியது.


2021-ஆம் ஆண்டு மே மாதம் இஸ்ரேலிய விமானத் தாக்குதல்கள் காஸா பகுதியில் உள்ள அவரது வீடு மற்றும் அலுவலகத்தைக் குறிவைத்தன.


2022-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில், ஒரு தொலைக்காட்சி உரையில், கிடைக்கக் கூடிய எந்தவொரு வழியிலும் இஸ்ரேலைத் தாக்குமாறு பாலத்தீன மக்களை அவர் ஊக்குவித்தார்.


ஹமாஸின் அரசியல் பணியகத்தை அதன் ஆயுதப் பிரிவான இஸ்ஸடீன் அல்-கஸ்ஸாம் படையுடன் இணைக்கும் முக்கிய நபராக சின்வாரை ஆய்வாளர்கள் அடையாளம் கண்டுள்ளனர். இஸ்ஸடீன் அல்-கஸ்ஸாம் அமைப்புதான், தெற்கு இஸ்ரேலில் அக்டோபர் 7-ஆம் தேதி நடந்த தாக்குதல்களுக்குத் தலைமை தாங்கியது.


சின்வார், தனது சிக்னல் கண்காணிக்கப்பட்டு, கண்டுபிடிக்கப்பட்விடுவோமோ என்ற அச்சத்தில் யாருடனும் தொடர்பு கொள்ளாமல், காஸாவிற்கு கீழே எங்கோ சுரங்கப்பாதையில் தனது மெய்க்காப்பாளர்களுடன் ஒளிந்துகொண்டிருப்பதாக இஸ்ரேல் நம்பி வந்தது.


இஸ்மாயில் ஹனியே படுகொலை செய்யப்பட்ட பிறகு 2024-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், சின்வார் ஹமாஸ் ஆயுதக்குழுவின் தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.