கம்மன்பிலவின் அறிக்கையை ஏற்கவில்லை - பேராயர் மெல்கம் ரஞ்சித்






 “அரசாங்கத்தின் தேவைக்கு ஏற்ப உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சம்பவம் தொடர்பான அறிக்கைகளை கைமாற்றுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் தொடர்பில் பேசி, அரசியல்வாதிகள் உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சம்பவத்தை வைத்து வீரர்களாவதில் பயனில்லை என்று பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை குறிப்பிட்டுள்ளார். 

 

நேற்று ஞாயிறு ஆராதனை ஒன்றில் உரையாற்றிய பேராயர், முன்னாள் அரசாங்க அதிகாரிகள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட புதிய குழுவொன்று தற்போது விசாரணை தொடர்பில் குழப்பத்தை ஏற்படுத்த செயற்பட்டு வருவதாக தெரிவித்தார்.

 

அவர் மேலும் தெரிவிக்கையில்,

 

இவ்வளவு காலமும் அமைதியான இருந்த, எங்களின் கோரிக்கைகளை பொருட்படுத்தாமல், எங்களின் கோரிக்கைகளுக்கு அவர்களின் ஆட்சியில் பதில் வழங்காமல், எங்களின் செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்படுத்திக்கொண்டிருந்த அரசியல் கட்சித் தலைவர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் தற்போது புதிதான அக்கறையுடன் உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் பேசுகிறார்கள்.


உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு கடந்த அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட குழுவின் இரண்டு அறிக்கைகள் தம்மிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

 

ஆனால் அந்த அறிக்கைகளில் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அதே பரிந்துரைகள் இடம்பெற்றுள்ளன என்று கூறிய அவர், அதே பரந்துரைகளை மீண்டும் எழுதுவதற்கு இன்னுமொரு குழுவை நியமிக்க வேண்டிய அவசியமில்லை.

 

தற்போதைய அரசாங்கத்தில் உயர் பதவிகளை வகிக்கும் இரண்டு அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைகள் சுட்டிக்காட்டுவதாக கூறிய பேராயர், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அறிக்கைகள் ஒவ்வொரு அரசாங்கத்தின் அரசியல் இலாபத்துக்காக தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

 

அதில் எதனையும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் தற்போதைய ஜனாதிபதி இது தொடர்பில் பக்கச்சார்பற்ற நீதியான விசாரணையை மேற்கொள்வார் எனவும் அதற்காக கண்களை திறந்து காத்திருப்பதாகவும் பேராயர் மேலும் தெரிவித்தார். 

 

இந்த இரண்டு செய்திகள் தொடர்பில் ஊடகங்களுக்கு இன்று அம்பலப்படுத்திய உதய கம்மன்பில, முன்னாள் பொலிஸ் அதிகாரிகளான ரவி செனவிரத்ன மற்றும் ஷானி அபேசேகர ஆகியோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பரிந்துரைக்கிறார்.

 

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் அரசாங்கம் அண்மையில் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக ரவி செனவிரத்னவையும், மத்திய குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் ஷானி அபேசேகரவையும் நியமித்தது.