களுவாஞ்சிக்குடியில் புதிய அணுகுமுறை!




  



(வி.ரி.சகாதேவராஜா)


சுய பாதுகாப்பு கொண்ட மாணவர் சமூகத்தை உருவாக்குதலை
முன்னிலைப்படுத்தி  பாடசாலை  மாணவர்களுக்கு சிறுவர் உரிமை மற்றும் பாதுகாப்பு தொடர்பான மதிப்பீட்டு பரீட்சையொன்று களுவாஞ்சிக்குடியில் நடைபெற்றுள்ளது.

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வ ரத்னத்தின் வழிகாட்டுதலின் கீழும் உதவி பிரதேச செயலாளர் திருமதி சத்தியகௌரி தரணிதரனின் நெறிப்படுத்தலிலும் 
பட்டிருப்பு வலய கல்வி பணிப்பாளர் சி. ஸ்ரீதரனின் ஒத்துழைப்புடனும்
மண்முனை தென் எருவில்பற்று கோட்டத்திற்குட்பட்ட தரம் 10ல் கல்வி பயிலும் சகல பாடசாலை மாணவர்களுக்கான  சிறுவர் உரிமை மற்றும் பாதுகாப்பு தொடர்பான மதிப்பீட்டு பரீட்சை கோட்டத்தில் உள்ள 18 பாடசாலைகளிலும்  அதிபர்களின் தயார்படுத்தலுடன் நேற்று முன்தினம் தினம் (09) புதன்கிழமை இடம்பெற்றது.

இப் பரீட்சையானது சிறுவர்கள் ஆபத்தான சூழலுக்கு முகம் கொடுக்க கூடிய வேளையில் பாதுகாப்பு பெறும் படிமுறைகள் தொடர்பாக எவ்வாறான  முறைமையினை அறிந்திருக்க வேண்டும்  எனும் சிந்தனையின் அடிப்படையில்  கட்டிளமைப்பருவ சிறுவர்கள் மத்தியில் தமது பாதுகாப்பு பொறிமுறைகள்  மற்றும் சிறுவர்களுக்குரிய கடமைகள், பொறுப்புகள், கட்டாயக் கல்வியின் அவசியம், இலங்கையில் சிறுவர் பாதுகாப்பு சட்ட ஏற்பாடுகள்,  சிறுவர் பாதுகாப்பு பொறிமுறைகள், மற்றும் பாதுகாப்பான இணைய பாவனை, சிறுவர்கள் தொடர்பான சமகால போக்குகள், குழந்தை  விருத்தி படிநிலைகள் மற்றும் சிறுவர் பாதுகாப்புடன் தொடர்புடைய ஏனைய விடயங்களையும் விடய பரப்பாக 
கொண்டமைந்ததுடன்  அவர்களது அறிவுத்திறன் மற்றும் மனப்பாங்கு விருத்தியினை மேம்படுத்துவதினையும் அடிப்படையாகக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

இப் பரீட்சை நடவடிக்கைகளுக்காக பிரதேச செயலகத்திலிருந்து சுமார் 50 உத்தியோகத்தர்கள் சகல பரீட்சை நிலையங்களிலும் இணைக்கப்பட்டிருந்தனர்.

இவ் விசேட நிகழ்ச்சி திட்டத்தினை மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர்களான  ம.புவிதரன் மற்றும் செ.சக்திநாயகம் ஆகியோர் ஒருங்கிணைப்பு செய்திருந்திருந்தனர்.