ஓந்தாச்சிமட கடற்கரையில் சர்வதேச சிறுவர் தின கொண்டாட்டம்





 ( வி.ரி.சகாதேவராஜா)


மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகம் ஒந்தாச்சிமடம் கிராம சமூக அமைப்புகளுடன் இணைந்து சர்வதேச சிறுவர் தினத்தினை முன்னிட்டு ஏற்பாடு செய்த "சிறுவர் மகிழ்ச்சி கூடல்" நிகழ்வானது  (2024.10.01)  பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம்  தலைமையில்ஒந்தாச்சிமடம் கடற்கரை திடலில் இடம்பெற்றது.

 'பிள்ளைகளை பாதுகாப்போம், சமமாக நடாத்துவோம்' எனும்  தொனிப்பொருளின் கீழ் கொண்டாடப்படும் இவ் வருடத்திற்கான  சிறுவர் தின நிகழ்வில் சிறுவர்களுக்கான பல நிகழ்வுகள் பிரதேச செயலாளரின் அறிவுறுத்தலின் பேரில் சிறுவர் மற்றும் மகளீர் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன் போது ஐம்பதிற்கும் அதிகமான பட்டங்கள் சிறுவர்களினால் வடிவமைக்கப்பட்டு பறக்கவிடப்பட்டதுடன், சிறுவர்களுக்கான பாரம்பரிய விளையாட்டுக்கள், ஆடல், பாடல் மற்றும் ஒவியம் வரைதல் என்பனவும் இடம்பெற்றிருந்தது. 

பிரதேச சிறுவர்கள்  பிரதம அதிதிகளாக கலந்துகொண்டிருந்த இந்த நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் திருமதி சத்யகெளரி தரணிதரன், பிரதேச செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள், ஒந்தாச்சிமடம்  பிரதேச பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், சமூர்த்தி சங்கங்களின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.