ஜம்மு காஷ்மீர் முதல்வராகும் ஒமர் அப்துல்லா






 ஜம்மு- காஷ்மீர் சட்டப்பேரவை முடிவுகள் வெளியானவுடன், அம்மாநிலத்தின் புதிய முதல்வராக ஒமர் அப்துல்லா பதவியேற்பார் என்று ஜம்மு- காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் ஃபரூக் அப்துல்லா தெரிவித்தார்.


ஜம்மு- காஷ்மீரின் முக்கிய அரசியல் குடும்பத்தில் இருந்து வந்த 54 வயதான ஒமர் அப்துல்லா, ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தின் முதல்வராக இரண்டாவது முறையாக பதவியேற்க உள்ளார். 2009ஆம் ஆண்டு அவர் முதல் முறையாக முதல்வரானார். ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு மாநில அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு 5 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், பத்து ஆண்டுகளுக்குப் பிறகு அங்கு தேர்தல் நடத்தப்பட்டுள்ளது.


வெற்றிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஒமர் அப்துல்லா, “2018-ஆம் ஆண்டுக்குப் பிறகு ஜம்மு- காஷ்மீரில் ஜனநாயக ஆட்சி அமையவுள்ளது. காஷ்மீர் கட்சிகளை, குறிப்பாக தேசிய மாநாட்டுக் கட்சியை பாஜக குறிவைத்தது. எங்களை பலவீனப்படுத்த முயற்சிகள் நடந்தன. எங்களுக்கு எதிராக சில கட்சிகளை திசை திருப்பவும் முயற்சிகள் எடுக்கப்பட்டன. ஆனால் இந்தத் தேர்தல் அந்த முயற்சிகள் அனைத்தையும் அழித்துவிட்டது.” என்று கூறினார்.


இந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், ஜம்மு- காஷ்மீரின் பாரமுல்லா தொகுதியில் போட்டியிட்ட ஒமர் அப்துல்லா, அப்போது திகார் சிறையில் இருந்தவாறே போட்டியிட்ட பொறியாளர் ரஷீத்திடம் தோல்வியடைந்தார்.