வாகனங்கள் தொடர்பில் ஜனாதிபதி செயலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது





 ஜனாதிபதி செயலக வளாகத்தில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள் தொடர்பில் ஜனாதிபதி செயலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

 

புதிய ஜனாதிபதி நியமிக்கப்பட்டதன் பின்னர் கடந்த சில தினங்களில் ஜனாதிபதி செயலகத்தில் ஒப்படைக்கப்பட்ட 107 வாகனங்கள் தற்காலிகமாக பொலிஸாரின் பாதுகாப்பில் ஜனாதிபதி செயலகத்திற்கு வெளியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

 

ஜனாதிபதி செயலகத்திற்குள் அதிக வாகனங்களை நிறுத்த முடியாத காரணத்தினால், ஜனாதிபதி செயலகத்திற்கு வெளியே உள்ள வளாகத்திலேயே குறித்த வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

 

எனினும், இந்த வாகனங்கள் காட்சிப்படுத்துவதற்காக வைக்கப்படவில்லை என ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

குறித்த வாகனங்கள் ஜனாதிபதி செயலகத்தின் ஊழியர்களுக்கு வழங்கப்படவில்லை எனவும், முன்னாள் ஜனாதிபதியினால் அரசியலமைப்பின் 41(1) பிரிவின் கீழ் நியமிக்கப்பட்ட தனிப்பட்ட ஊழியர்களுக்கு வழங்கப்பட்டிருந்த வாகனங்கள் எனவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.