ஐந்து ஆண்டுகளின் பின் டெஸ்டில் நியூசிலாந்தை வீழ்த்திய இலங்கை




 


சுற்றுலா நியூசிலாந்து அணியுடனான இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டத்தில் 63 ஓட்டங்களினால் வெற்றியீட்டிய இலங்கை அணி நியூசிலாந்துடன் 5 ஆண்டுகளின் பின்னர் ஹெட்ரிக் தோல்வியை அடுத்து முதல் வெற்றியை பதிவு செய்தது. 


ஐ.சி.சி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் அங்கமாக காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் கடந்த 26ஆம் திகதி ஆரம்பமாகிய முதல் டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடி முதல் இன்னிங்ஸூக்காக 305 ஓட்டங்களை சேர்த்தது. துடுப்பாட்டத்தில் கமிந்து மெண்டிஸ் தனது நான்காவது சதம் கடந்து 114 ஓட்டங்களை அதிகபட்சமாக குவித்தார். பதிலுக்கு முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 340 ஓட்டங்களை மொத்தமாக பெற்றது. 


அதன் அடிப்படையில் 35 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிஸை தொடர்ந்த இலங்கை அணி திமுத்தின் 83 ஓட்டங்கள், சந்திமாலின் 61 ஓட்டங்கள், மெத்யூஸின் 50 ஓட்டங்கள்  உதவியுடன் இலங்கை அணி 309 ஓட்டங்களை சேர்த்து. அதன் அடிப்படையில் நியூசிலாந்து அணியின் வெற்றி இலக்காக 275 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டது. 


குறித்த இலக்கை நோக்கி துடுப்படுத்திய நியூசிலாந்து அணி நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 207 ஓட்டங்களை பெற்றிருந்தது. நேற்று போட்டியின் ஐந்தாம் நாள் ஆட்டம் தொடர்ந்த நிலையில் நியூசிலாந்து அணி அடுத்தடுத்து இரு விக்கெட்களை இழக்க இலங்கை அணி 63 ஓட்டங்களினால் வெற்றியீட்டியது. 


முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்கள், இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்கள் என மொத்தமாக 9 விக்கெட்களை வீழ்த்திய பிரபாத் ஜெயசூரிய போட்டியின் ஆட்டநாயகனாக தெரிவானார். இரண்டாவதும், இறுதியுமான டெஸ்ட் போட்டி நாளை மறுதினம் (26) இதே காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகிறது. இந்த ஆட்டத்தில் இலங்கை அணி வெற்றிபெற்று, அல்லது போட்டி சமநிலையில் நிறைவடைந்தால் இலங்கை அணி 15 ஆண்டுகளின் பின் நியூசிலாந்துடன் டெஸ்ட் தொடர் வென்ற வரலாற்றை பதிவுசெய்யும். 


இலங்கை அணி இறுதியாக கடந்த 2009ஆம் ஆண்டு சொந்த மண்ணில் வைத்து நியூசிலாந்துடன் இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற அடிப்படையில் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை இலங்கை அணி காலி மைதானத்தில் நியூசிலாந்துடன் விளையாடிய 5 ஆட்டங்களிலும் வெற்றிபெற்றுள்ளமையும் விசேட அம்சமாகும்.


காலியிலிருந்து அகீல் சிஹாப்