சட்டத்தரணி ஒருவரின் சட்டத் தொழில் ரத்து!




 பணத்தை பெற்றுக்கொண்டு நீதிமன்றத்தில் முறையாக ஆஜராகாத சட்டத்தரணி ஒருவரின் சட்டத் தொழிலை ரத்து செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, சரத் ​​விஜேசிறி டி சில்வா என்ற சட்டத்தரணியின் சட்டத் தொழிலை ரத்து செய்யுமாறு உயர் நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இரண்டு காணி வழக்குகளில் ஆஜராவதற்காக குறித்த சட்டத்தரணி உரிமையாளரிடம் இருந்து 44 இலட்சம் ரூபா பணத்தை பெற்றுக்கொண்டு முறையாக ஆஜராகவில்லை என உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சட்டத்தரணி தொழிலில் இருந்து விலக்கப்பட்டவர் மூன்று மாதங்களுக்குள் மூன்று மில்லியன் ரூபா நட்டஈட்டுத் தொகையை மனுதாரருக்கு வழங்க வேண்டும் எனவும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளதாக “அத தெரண” நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.