தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையை மீண்டும் நடத்த கல்வி அமைச்சு முன்வரவேண்டும்




 


மாளிகைக்காடு செய்தியாளர்


தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் ஊடாக மேலதிக விசாரணைகள் நடத்தப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ள கருத்தை வரவேற்கிறோம். ஆனாலும் குறித்த விசாரணைகளின் உண்மைகளை கருத்திற்கொண்டு மீண்டும் புலமைப்பரிசில் பரீட்சையை நடத்த கல்வி அமைச்சு முன்வர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம் என அல்- மீஸான் பௌண்டஷன்-ஸ்ரீலங்கா கல்வியமைச்சை கேட்டுக்கொண்டுள்ளது.

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பில் கல்வியமைச்சு க்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும்,

குறித்த விசாரணைகளின் உண்மைகளை கருத்திற்கொண்டு மீண்டும் புலமைப்பரிசில் பரீட்சையை நடத்துவதுடன் அதற்கான செலவுகள் உட்பட தண்டப்பணம் சகலதையும் புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவை மேற்கொண்டவர்களிடமிருந்து அறவிட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதுடன் விசாரணைகள் நியாயமான முறையில் நடைபெற்று பாதிக்கப்பட்டுள்ள சிறார்களுக்கு நியாயமான தீர்வு வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், இதேவேளை புலமைப்பரிசில் பரீட்சையில் வினாத்தாள் கசிந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மஹரகம தேசிய கல்வி நிறுவகத்தின் உயரதிகாரி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமையானது இலங்கையின் கல்வித் துறைக்கு கிடைத்த நம்பிக்கையாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.