உள்ளூராட்சி தேர்தலை நடத்தியிருந்தால், இதுதான் நடந்திருக்கும்!




 




உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போடுவது மக்களின் அடிப்படை உரிமை மீறல் என சுட்டிக்காட்டிய போதிலும், மக்களின் வாழ்வுரிமையைப் பாதுகாப்பதற்காக அந்தத் தேர்தலை நடத்த முடியாமல் போனதற்கு வருந்தவில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தும் வேலைத்திட்டத்தில் ஒவ்வொரு மணித்தியாலமும் பெறுமதி வாய்ந்தது என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துவதற்கு அந்த நேரத்தை செலவிட்டிருந்தால் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டிருக்க முடியாது போயிருக்கும் எனவும் தெரிவித்தார்.

மஹரகம இளைஞர் சேவை மன்றக் கேட்போர் கூடத்தில் இன்று (22) பிற்பகல் நடைபெற்ற புதிய மக்கள் முன்னணியின் தேசிய மாநாட்டில் உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

உணவு, மருந்து, எரிவாயு, எரிபொருள் இன்றி மக்களின் அன்றாட வாழ்க்கையைத் தொடர முடியாது என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, கடந்த இரண்டு வருடங்களில் மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கத் தன்னை அர்ப்பணித்துள்ளதாகவும் கூறினார்.

அத்துடன், ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் பொதுத் தேர்தலை நடத்துவதற்குத் தீர்மானித்துள்ளதாகவும், அதற்குத் தேவையான பணம் ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அதன் பின்னர் மாகாண சபைத் தேர்தலையும், உள்ளூராட்சி சபைத் தேர்தலையும் நடத்த எதிர்பார்த்துள்ளதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

மேலும் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

''அரசியல் ரீதியாக நாம் இப்போது புதிய சகாப்தத்தில் நுழைந்துள்ளோம். அந்த சகாப்தம் எங்கள் அணியால் உருவாக்கப்பட்டது. இந்த நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தபோது பாரம்பரிய தலைவர்கள் பொருளாதாரத்தை மீட்டெடுக்க முன்வரவில்லை. ஆனால் எமது குழு ஓரணியில் திரண்டு அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டது.

அப்போது எங்கள் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்திருந்தது. ரூபாயின் பெறுமதி சரிந்திருந்தது. ஆனால், பொருளாதாரத்தை மறுசீரமைத்து, ரூபாயைப் பலப்படுத்தி, நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தியுள்ளோம். கடந்த இரண்டு வருடங்களில் நாட்டின் பொருளாதாரம் வலுவாக உள்ளது. வரும் ஆண்டிலும் அது வலுவாக இருக்கும் என நம்புகிறோம். பொருளாதார வளர்ச்சியை இலக்காக கொண்டு, நாம் முன்னேற வேண்டும்.

சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தங்களை மீறினால் பணம் கிடைக்காது. அந்த நிபந்தனைகளை மறுபரிசீலனை செய்வது என்பது தற்போதைய நிலைமைகளை விட்டு விலக நேரிடும். நாங்கள் இன்னும் மென்மையான விதிமுறைகளைக் கேட்டோம், ஆனால் கிடைக்கவில்லை. இந்த சலுகைகள் மூலம் பொருளாதாரத்தை முன்னோக்கிக் கொண்டு செல்லும் திறன் நம்மிடம் உள்ளது. ஆனால் இவற்றை மாற்ற முயற்சித்தால் கிடைக்க வேண்டிய பணத்தை இழக்க நேரிடும். பின்னர் நாம் வரிசையில் நிற்கும் யுகத்திற்குச் செல்ல நேரிடும்.

மிகவும் சிரமப்பட்டு நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுத்துள்ளோம்.. நான் நாட்டைப் பொறுப்பேற்றபோது, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 89 பில்லியன் டொலரிலிருந்து 76 பில்லியன் டொலர் வரை குறைந்திருந்தது. இதை மீண்டும் 84 பில்லியன் டொலராகக் கொண்டு வந்துள்ளோம். இரண்டு வருடங்களில் இந்தப் பணியை முடித்தோம். ஏனைய நாடுகளுக்கு இதுபோன்ற நிலையில் இருந்து மீண்டுவர 5 - 10 ஆண்டுகள் ஆனது. நாம் சரியான பொருளாதார வேலைத்திட்டத்தை முன்னெடுத்ததால், இந்த வெற்றியைப் பெற முடிந்தது. இதையெல்லாம் தவிர்த்துவிட்டு உள்ளூராட்சி மன்ற, மாநகர சபைத் தேர்தல்களை நடத்தியிருந்தால் என்ன நடக்கும் என்று கேட்க விரும்புகிறேன். உள்ளூராட்சித் தேர்தலை நடத்த குறைந்தது இரண்டரை மாதங்கள் தேவைப்படும். அந்த இரண்டரை மாதங்களை நாம் இழந்திருந்தால், இன்று நமது மொத்த உள்நாட்டு உற்பத்தியை 84 பில்லியன் டொலராக உயர்த்தியிருக்க முடியுமா என்று நான் கேட்க விரும்புகிறேன்.

சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடினோம். உலகின் பல்வேறு நாடுகளுக்குச் சென்று தலைவர்களைச் சந்தித்து கலந்துரையாடினோம். இந்த நேரத்தை உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்குப் பயன்படுத்தியிருந்தால் இந்த நாட்டின் பொருளாதாரத்தை மீட்டிருக்க முடியுமா என்று கேட்க வேண்டும். ஒவ்வொரு மாதமும், ஒவ்வொரு வாரமும், ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணிநேரமும் நாட்டை முன்னேற்றுவதில் முக்கியமானதாக இருந்தது.

இரண்டு வருடங்களில் உலகில் எந்த நாடும் இத்தகைய வெற்றியைப் பெற்றிருக்காது. சர்வதேச சமூகம் எங்களைப் பாராட்டுகிறது. இவ்வாறு பணியாற்றியிருக்காவிட்டால் இந்த நாடு அழிந்திருக்கும்.

ஆனால் எதிர்கட்சிகள் வழக்கு தொடர்ந்தன. 2022இல் பொருளாதாரத்தை இயல்பு நிலைக்குக் கொண்டுவர ஏன் அவர்களுக்கு உயர் நீதிமன்றத்திற்கு சென்று வழக்குத் தொடர முடியவில்லை? அதனால் இந்தத் தேர்தலை ஒத்திவைத்ததில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. ஆனால் நாட்டில் ஜனாதிபதி தேர்தலையும் பொதுத் தேர்தலையும் ஒத்திவைக்க முடியாது. அது மக்களின் உரிமை. அந்த வாக்களிக்கும் உரிமையை நான் மதிக்கிறேன். அதேபோல், மக்களின் வாழ்வுரிமையையும் நான் மிகவும் மதிக்கிறேன். எரிவாயு, மருந்து, எரிபொருள் இல்லாமல் மக்கள் வாழ முடியாது. அந்த அடிப்படை உரிமைகளைப் பாதுகாத்தேன்.. தேர்தலை எப்போது நடத்துவது என்பதை தேர்தல் ஆணையம்தான் முடிவு செய்ய வேண்டும் என உயர் நீதிமன்றம் இன்று தெரிவித்துள்ளது. ஜனாதிபதி தேர்தலின் பின்னர் பொதுத் தேர்தலை நடத்துவதற்கு நாம் அனைவரும் தீர்மானித்துள்ளோம். அதற்கான நிதி ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் மாகாண சபை தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மாகாண சபைத் தேர்தல் அவசியம் என்று பலர் கூறுகின்றனர். இதனை நாம் ஏற்றுக்கொள்கிறோம். அதற்குத் தேவையான பணத்தையும் ஒதுக்க வேண்டும். இதுகுறித்த புதிய சட்டங்களை கொண்டு வர வேண்டும். இளைஞர் பிரதிநிதித்துவம் கொண்டுவரப்பட வேண்டும். இரண்டு வருடங்கள் என்ற குறுகிய காலத்தில் இந்த நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த முடிந்ததையிட்டு நான் மகிழ்ச்சியடைகிறேன். எனவே, நாம் எடுக்கும் முடிவு சரியா தவறா என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும்.'' என்று தெரிவித்தார்.

புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஷ்வர பண்டார
''2022 ஆம் ஆண்டு மே மாதம் 09 ஆம் திகதி நாடு தீக்கிரையாக்கப்பட்டு பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல கொல்லப்பட்டு நொடிக்கு நொடி வன்முறையில் மூழ்கியிருந்த நிலையில் அன்றைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இரவு 7.11 மணியளவில் பதவி விலகினார். முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, எதிர்க்கட்சித் தலைவருக்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்து, நாட்டைப் பொறுப்பேற்பது தொடர்பில் கலந்துரையாட வருமாறு அறிவித்தார். ஆனால் மறுநாள் மாலை 6.32 மணி வரை எதிர்க்கட்சித் தலைவரோ அல்லது அந்தத் தரப்பிலிருந்து யாரும் கலந்துரையாடலுக்கு வரவில்லை என்பதை பொறுப்புடன் தெரிவித்துக் கொள்கிறேன். மறுநாள் மாலை 6.32 மணியளவில் எரான் விக்கிரமரத்ன, கபீர் ஹாசிம், ஹர்ஷ டி சில்வா ஆகியோர் வந்து கலந்துரையாடினர். கோட்டாபய ராஜபக்ஷ கோரிக்கைகளுக்கு இணங்கவில்லை என நாலக கொடஹேவா நேற்று தெரிவித்திருப்பதைக் கண்டேன். கோரிக்கை வைக்க அது நேரமல்ல. அப்போது நாடு பேரம் பேசும் நிலையில் இருக்கவில்லை.

'நாட்டை நேசிப்பவராக இருந்தால், அந்த நெருக்கடியை சீர்செய்யும் திட்டம் உங்களிடம் இருந்திருந்தால், முழு மொட்டுக் கட்சியினதும் ஆதரவை வழங்குவேன் சஜித்', என்று கோட்டாபய ராஜபக்ஷ கூறினார். அப்போது நீங்கள் நாட்டைப் பொறுப்பேற்றிருக்க வேண்டும். ஆனால் அவர் அந்தப் பொறுப்பை ஏற்கவில்லை. நாட்டைப் பொறுப்பேற்கும் வேலைத்திட்டமும் தன்னம்பிக்கையும் அவரிடம் இருக்கவில்லை.

அதனால் காலம் கடத்திவிட்டு இறுதித் தருணத்தில் கடைசி கடிதம் அனுப்பினார். அதற்கு நாலக கொடஹேவா கடிதத்தை எழுதுமாறு ஆலோசனை வழங்கினார். 

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதி பதவியில் அமர்த்துவார் என்பதை நாலக கொடஹேவா முன்பே அறிந்தார். நாட்டை ஏமாற்றுவதற்கு உடனடியாக கடிதம் எழுதுமாறு எதிர்க்கட்சித் தலைவரிடம் கோரியிருந்தார். நாலக கொடஹேவா இப்போது எதிர்க்கட்சித் தலைவரின் சிரேஷ்ட ஆலோசகராகப் பணியாற்றி வருகிறார்.

அத்துடன், ஜூலை 12ஆம் திகதி, நாட்டைக் கைப்பற்ற விரும்புவதாகக் கடிதம் அனுப்பியதாக அனுரகுமாரவும் கூறியிருக்கிறார். அது உண்மையில்லை. அந்த கடிதத்தை காட்டுமாறு அனுரகுமாரவுக்கு சவால் விடுத்து 48 மணிநேரம் ஆகிவிட்டது.

அதனால் அனுரவிற்கு இன்னும் நேரம் உள்ளது அவர் அனுப்பிய கடிதத்தைக் காட்ட வேண்டும். அவருடன் விவாதம் செய்யவும் நான் தயாராகவே உள்ளேன்'' என்று ஜனாதிபதி தெரிவித்தார்.