பொறுப்புக்கூறலை ஊக்குவித்தல் தொடர்பான பயிற்சிப் பட்டறை







நூருல் ஹுதா உமர்
சமூகம் செயற்திட்டங்களில் பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மை ஊடாக நல்லாட்சியை உறுதிப்படுத்தும் நோக்கில் செயற்படும் WE Connect திட்டத்தின் ஏற்பாட்டில், அம்பாறை மாவட்ட சிவில் சமூக மற்றும், சமூக ஊடக செயற்பாட்டாளர்களின் பங்குபற்றலுடன் முன்னெடுக்கப்பட்ட செயலமர்வு சனிக்கிழமை (17) மாளிகைக்காடு பாவா றோயலி வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்றது.
சமூக சேவைகள் மற்றும் அபிவிருத்தி திட்டங்களின் வினைத்திறனை அதிகரிக்கும் நோக்கில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இடம்பெற்ற இப்பயிற்சி பட்டறையில் அம்பாறை மாவட்டத்தில் காணப்படும் சமூக, பொருளாதார மற்றும் சூழலியல் பிரச்சினைகள் உட்பட நிலைபேறான அபிவிருத்தியைப் பாதிக்கும் பல்வேறு விடயதானங்கள் குறித்து முன்வைப்புகள் இடம்பெற்றன.
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி அஸ்லம் சஜா அவர்களின் நெறிப்படுத்தலில் நடைபெற்ற இப்பயிற்சிப் பட்டறையில் குரல்கள் இயக்கத்தின் செயற்பாட்டாளரும் சட்டத்தரணியுமான அம்ஜத் முகம்மட், புழுதி சமூக உரிமைக்கான அமைப்பின் செயற்பாட்டாளர் கோபகன் ஆகியோர் இந்நிகழ்வின் வளவாளர்களாக கலந்து கொண்டனர்.
இரண்டு அமர்வுகளாக நடைபெற்ற இந்நிகழ்வின், இரண்டாம் அமர்வின் பிரதம அதிதியாக ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான முன்னாள் வதிவிட பிரதிநிதி சட்ட முதுமானி அப்துல் அஸீஸ், அத்துடன் நிகழ்வின் சிறப்பு அதிதியாக அமெரிக்கன் ஸ்பேஸஸ் பணிப்பாளர் முகம்மட் நௌஸாத் ஆகியோர் கலந்து கெண்டு சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.