திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலய,தீர்த்தோற்சவம்







வி.சுகிர்தகுமார்   



  வரலாற்றுச்சிறப்புமிக்க அம்பாரை மாவட்டம் திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலய வருடாந்த ஆடி அமாவாசை சமுத்திர தீர்த்தோற்சவம் வரலாறு காணாத ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்புடன் இன்று (04) இடம்பெற்றது.
சிவபூமி என திருமூலரால் போற்றப்பட்ட இலங்காபுரியில் கிழக்கு மாகாணத்தில் அம்பாரை மாவட்டத்தில் வங்ககடலோரம் வீற்றிருந்து நாடிவரும் அடியவர்களின் குறைநிறைகளை தீர்த்து வேண்டும் செல்வத்தை வாரிவழங்கும் திருக்கோவில்  சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தின் கொடியேற்றம் கடந்த 18 ஆம் திகதி இடம்பெற்றதுடன் தொடர்ந்து 15 நாட்கள்  அம்பாரை மாவட்டத்தின் பல்வேறு தமிழ்ப்பிரதேச மக்களது திருவிழாவோடும் இடம்பெற்று இன்று இடம்பெற்ற தீர்த்தோற்சவம் கொடியிறக்கம் நாளை இடம்பெறும் 05 ஆம் திகதி இடம்பெறும் பூங்காவனம் 06 ஆம் திகதி இடம்பெறும் வைரவர் பூஜையுடன் நிறைவுறவுள்ளது.
தீர்த்தோற்சவ தினமான இன்று காலை பொற்சுண்ணம் இடிக்கப்பட்டதன் பின்னர் கொடிமரப்பூஜை நடைபெற்றது.
தொடர்ந்து மூலவருக்கும் வசந்த மண்டபத்தில் வீற்றிருக்கும் முருகப்பெருமானுக்கும் விசேட அலங்கார பூஜை நடைபெற்றதன்  பின்னர்; எழுந்தருளிய வள்ளி தெய்வானை சமேதரராக முருகப்பெருமான் நாதஸ்வர மேள ஒலி முழங்க அடியார்களின் பிரார்த்தனையுடன்  உள்வீதி வலமாக வலம் வந்தார்
 பின்பு ஆலயத்தின் முன்பாக அமைக்கப்பட்ட பந்தலின் கீழ் அமர்த்தப்பட்ட முருகப்பெருமானுக்கு அபிசேகம் செய்யப்பட்டது. பின்னர் அடியார்கள் புடை சூழ வங்ககடல் நோக்கி தீர்த்தோற்சவத்திற்காக அழைத்துச் செல்லப்பட்டதுடன் முருகப்பெருமானின் தீர்த்தோற்சவம் நடைபெற்றது.
தீர்த்தோற்சவத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். இதேநேரம் பிதுர்கடன் நிறைவேற்றும் நிகழ்வும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் அன்னதானம் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
ஆலயத்தலைவர் சுரேஸ் தலைமையில் இடம்பெற்ற ஆடி அமாவாசை உற்சவம் மற்றும் தீர்த்தோற்சவ கிரியைகள் யாவும் சிவாகம வித்தியா பூசணம் சிவாச்சாரிய திலகம் ஜோதி;ட வித்தியா தத்துவநிதி விபுலமணி சிவஸ்ரீ சண்முகமகேஸ்வரக்குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் மற்றும் ஆலய குரு சிவஸ்ரீ அங்குசநாதக்கருக்கள் ஆகியோhரால் நடாத்தி வைக்கப்பட்டது.