இஸ்ரேல் மீது ராக்கெட் வீச்சு: அமெரிக்கா, பிரிட்டன் தனது குடிமக்களுக்கு எச்சரிக்கை





 மத்திய கிழக்கில் நாளுக்கு நாள் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், லெபனானை விட்டு உடனே வெளியேறுமாறு தனது குடிமக்களை அமெரிக்கா கேட்டுக் கொண்டுள்ளது.


மத்திய கிழக்கில் நிலைமை "விரைவாக மோசமடையக் கூடும்" என்று கூறியுள்ள பிரிட்டிஷ் வெளியுறவு செயலாளர் டேவிட் லாம்மியும் இதேபோன்ற எச்சரிக்கையை விடுத்துள்ளார்.


டெஹ்ரானில் கடந்த புதன்கிழமை ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டதற்காக இஸ்ரேலுக்கு "கடுமையான" பதிலடி கொடுக்கப் போவதாக இரான் சபதம் செய்துள்ளது. பெய்ரூட்டில் ஹெஸ்பொலா தளபதி ஃபுவாட் ஷுக்ரை இஸ்ரேல் கொன்ற சில மணிநேரத்திற்குப் பிறகு ஹனியே படுகொலை நடந்தது.


மத்திய கிழக்கில் இரான் ஆதரவுக் குழுக்களில் ஒன்றான, லெபனானை தளமாகக் கொண்ட ஹெஸ்பொலா, இரானின் அத்தகைய பதிலடியில் பெரும் பங்கு வகிக்கக்கூடும் என்றும், இது இஸ்ரேலின் கடுமையான பதிலடியை தூண்டக்கூடும் என்றும் அஞ்சப்படுகிறது.



இஸ்ரேல் மீது ஹெஸ்பொலா தாக்குதல்

ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் (22:25 BST சனிக்கிழமை) உள்ளூர் நேரப்படி சுமார் 00:25 மணியளவில் வடக்கு இஸ்ரேலில் உள்ள பெய்ட் ஹில்லெல் (Beit Hillel) நகரில் டஜன்கணக்கான ராக்கெட்டுகளை ஏவி ஹெஸ்பொலா தாக்குதல் நடத்தியுள்ளது.


சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட காட்சிகளில் வான் பாதுகாப்பு அமைப்புகள் ஏவுகணைகளை இடைமறிக்கும் காட்சிகளைக் காட்டுகின்றன. உயிர்ச்சேதம் குறித்து எந்த தகவலும் இல்லை.


ஜோர்டான் வெளியுறவு அமைச்சகமும் தனது குடிமக்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது, லெபனானில் உள்ளவர்களை உடனடியாக வெளியேறுமாறும், மற்றவர்கள் அங்கு பயணிக்க வேண்டாம் என்று எச்சரித்துள்ளது.



விமான சேவைகள் ரத்து

லெபனானுக்குச் செல்வதற்கு எதிரான தற்போதைய எச்சரிக்கையின் அடிப்படையில், இஸ்ரேலுக்கும் பயணத்தைத் தவிர்க்குமாறு கனடா தனது குடிமக்களை எச்சரித்துள்ளது. ஏனெனில் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் "நிலைமை எப்போது வேண்டுமானாலும் மேலும் மோசமடையக் கூடும்" என்பதே தற்போதைய நிலைமை.


லெபனானில் தங்க விரும்புபவர்கள் 'நீண்ட காலத்திற்கு தங்கும் வகையில் பாதுகாப்பான இருப்பிடத்தை' அடையாளம் கண்டு சரியான திட்டங்களுடன் தயாராக இருக்க வேண்டும் என்று அமெரிக்க தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.


பதற்றம் அதிகரித்துள்ளதால் லெபனானுக்கு பல விமான நிறுவனங்கள் விமான சேவைகளை தற்காலிகமாக ரத்து செய்துள்ளன. சேவையைத் தொடரும் சில நிறுவனங்களில் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துவிட்டன. ஆனாலும் "லெபனானை விட்டு வெளியேற வணிக ரீதியான போக்குவரத்து சேவைகள் இன்னும் செயல்பாட்டில் உள்ளன" என்று அமெரிக்க தூதரகம் கூறியுள்ளது.




மத்திய கிழக்கில் அமெரிக்க, பிரிட்டிஷ் போர்க்கப்பல்கள்

இரான் மற்றும் அதன் ஆதரவு ஆயுதக்குழுக்களின் சாத்தியமான தாக்குதல்களில் இருந்து இஸ்ரேலைக் காக்க கூடுதல் போர்க்கப்பல்கள் மற்றும் போர் விமானங்களை அந்தப் பகுதியில் நிலைநிறுத்தப் போவதாக பென்டகன் அறிவித்துள்ளது.


லெபனானை விட்டு தனது குடிமக்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கு உதவ கூடுதல் இராணுவ வீரர்கள், தூதரக ஊழியர்கள் மற்றும் எல்லைப் படை அதிகாரிகளை அனுப்புவதாக பிரிட்டன் கூறியுள்ளது. ஆனால் "வர்த்தக ரீதியிலான விமான சேவைகள் செயல்பாட்டில் இருக்கும் போதே" லெபனானை விட்டு வெளியேறுமாறு தனது குடிமக்களை பிரிட்டன் வலியுறுத்தியுள்ளது.


இரண்டு பிரிட்டிஷ் இராணுவக் கப்பல்கள் ஏற்கனவே இப்பகுதியில் உள்ளன. பிரிட்டிஷ் விமானப்படையும் போக்குவரத்து ஹெலிகாப்டர்களை தயார் நிலையில் வைத்துள்ளது.


"இந்த மோதல் பிராந்தியம் முழுவதும் பரவுவதில் யாருக்கும் விருப்பமில்லை" என்று பிரிட்டிஷ் வெளியுறவு செயலாளர் டேவிட் லாம்மி கூறியுள்ளார்.


'நரகத்தின் கதவுகள் திறந்தன' - ஹமாஸ் தலைவர் கொல்லப்பட்டதால் காஸா அமைதிப் பேச்சு என்னவாகும்?


இஸ்ரேலிய அமைச்சர்களுக்கு செயற்கைக்கோள் தொலைபேசி

இதற்கிடையில், காஸாவில், இடம்பெயர்ந்தவர்களுக்கு தங்குமிடமாக இருக்கும் பள்ளி ஒன்றில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குறைந்தது 17 பேர் கொல்லப்பட்டதாக அங்கே ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


ஆனால், காஸா நகரின் ஷேக் ரத்வான் பகுதியில் உள்ள ஹமாமா பள்ளியை தீவிரவாதிகள் தங்களது கட்டளை மையமாக பயன்படுத்தி வருவதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. ஹமாஸோ, பொதுமக்கள் வசிக்கும் இடத்தில் இருந்து செயல்படவில்லை என்று கூறி அதனை மறுத்துள்ளது.


நாட்டின் தகவல் தொடர்பு உள்கட்டமைப்பு மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்பதால், இஸ்ரேலிய அமைச்சர்கள் அனைவருக்கும் செயற்கைக்கோள் தொலைபேசிகள் வழங்கப்பட்டுள்ளன.


இஸ்ரேல், இரானில் அசாதாரண நிலை

ஏப்ரலில், இரான் 170 ட்ரோன்கள், 30 க்ரூஸ் ஏவுகணைகள் மற்றும் குறைந்தது 110 பாலிஸ்டிக் ஏவுகணைகளைப் பயன்படுத்தி இஸ்ரேல் மீது வான்வழித் தாக்குதலை நடத்தியது.


சிரியாவின் டமாஸ்கஸில் உள்ள இரான் துணைத் தூதரகம் மீது இஸ்ரேல் குண்டுவீசி தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக இது நடந்தது. தற்போதும் இரானின் பதிலடி இதே வடிவத்தில் இருக்கலாம் என்று பலரும் அஞ்சுகின்றனர்.


ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுக் கொள்கைத் தலைவர் ஜோசப் பொரெலுடன் இரானின் தற்காலிக வெளியுறவு அமைச்சர் அலி பக்கேரி கனி வெள்ளிக்கிழமையன்று தொலைபேசியில் பேசினார். அப்போது அவர், இஸ்ரேலை "தண்டிப்பதற்கு" இரான் "சந்தேகத்திற்கு இடமின்றி அதன் உள்ளார்ந்த மற்றும் நியாயமான உரிமையைப் பயன்படுத்தும்" என்று கூறினார்.


இரானின் அரசு தொலைக்காட்சியில் ஒரு அறிவிப்பாளர் "உலகம் அசாதாரண காட்சிகளைக் காணும்" என்றுவெள்ளிக்கிழமையன்று எச்சரித்தார்.


இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் தனது நாட்டு குடிமக்களை எச்சரித்துள்ளார், "சவாலான நாட்கள் காத்திருக்கின்றன. எல்லா தரப்பிலிருந்தும் அச்சுறுத்தல்களை உள்ளன. எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம்" என்று அவர் கூறியுள்ளார்.


இஸ்ரேல் vs இரான்: அமெரிக்க போர்க்கப்பல்கள், போர் விமானங்கள் விரைவு - மத்திய கிழக்கில் என்ன நடக்கிறது?


இஸ்ரேல் vs இரான்பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,இஸ்மாயில் ஹனியே, டெஹ்ரானில் கொல்லப்பட்ட ஹமாஸின் அரசியல் பிரிவு தலைவர்

இரானில் ஹமாஸ் தலைவர் படுகொலை

இஸ்ரேல் கட்டுப்பாட்டில் உள்ள கோலன் குன்றுகள் மீதான தாக்குதலில் 12 குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் கொல்லப்பட்டதை அடுத்து இஸ்ரேலுக்கும் இரானுக்கும் இடையிலான பதற்றம் ஏற்கனவே அதிகரித்துள்ளது.


ஹெஸ்பொலாவைக் குற்றம் சாட்டிய இஸ்ரேல். "கடுமையான" பதிலடி கொடுக்கப்படும் என்று எச்சரித்தது. ஆனால், அந்த தாக்குதலில் தங்களுக்கு தொடர்பு இல்லை என்று ஹெஸ்பொலா கூறியது.


சில நாட்களுக்குப் பிறகு, பெய்ரூட்டில் இஸ்ரேலிய விமானப்படைத் தாக்குதலில் ஹெஸ்பொலா மூத்த தளபதி ஃபுவாட் ஷுக்ர் கொல்லப்பட்டார். இரண்டு குழந்தைகள் உட்பட 4 பேர் பலியாயினர்.


அதன் சில மணிநேரத்தில், ஹமாஸின் அரசியல் பிரிவு தலைவராக இருந்த இஸ்மாயில் ஹனியே படுகொலை செய்யப்பட்டார். இரானின் புதிய ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியானின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்த போது அவர் கொல்லப்பட்டார்.


டெஹ்ரானில் வியாழக்கிழமை ஹனியேவின் இறுதிச் சடங்கின் போது நடந்த பிரார்த்தனைக்கு இரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி தலைமை தாங்கினார். ஹனியே கொலைக்கு இஸ்ரேல் "கடுமையான தண்டனையை" அனுபவிக்கும் என்று அவர் ஏற்கனவே சபதம் செய்துள்ளார்.