8 வயதுடைய சப்பிறா மாஹீர் என்ற சிறுவன் விபத்தில் உயிரிழப்பு





 மட்டக்களப்பு நிருபர் சரவணன்-


வாகரை பிரதான வீதியிலுள்ள பனிச்சங்கேணி பாலத்தில் வீதியினை குறுக்கே கடந்த சிறுவன் மீது வேன் மோதியதில் 8 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் நேற்று (17) இரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்தனர்.

வாழைச்சேனை, மீராவோடையைச் சேர்ந்த 8 வயதுடைய சப்பிறா மாஹீர் என்ற சிறுவனே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

குறித்த சிறுவனுடன் தாய், தந்தை முச்சக்கரவண்டியில் சம்பவ தினமான இரவு 7 மணியளவில் பயணித்துக் கொண்டிருந்த போது பனிச்சங்கேணி பாலத்தில் முச்சக்கரவண்டியின் முன்பக்க விளக்கு பழுதடைந்துள்ளதையடுத்து பாலத்தில் நிறுத்திவிட்டு அதனை சிறுவனின் தந்தை சரி செய்துகொண்ட நிலையில் தாய் முச்சக்கரவண்டியில் இருந்து இறங்கி பாலத்தின் எதிர்பக்கமாக சென்று கையடக்க தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்துள்ளார்.

இந்த நிலையில் குறித்த சிறுவன் வீதியின் குறுக்கே கடந்து தாயாரிடம் செல்ல முற்பட்டபோது வாகரையை நோக்கி பயணித்த வேன் ஒன்று சிறுவனை மோதியதையடுத்து படுகாயமடைந்த சிறுவனை வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் சிறுவன் உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து வேன் சாரதியை கைது செய்ததுடன் சடலத்தை பிரேத பரிசோதனைகளுக்காக நீதிமன்ற அனுமதியை பெறுவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுவருவதாக பொலிஸார் தெரிவித்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாணைகளை வாகரை போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



-மட்டக்களப்பு நிருபர் சரவணன்-