69 லட்சரூபாவில் புதிய தேர்!





 ( வி.ரி.சகாதேவராஜா)

வரலாற்றுப்பிரசித்தி பெற்ற காரைதீவு பாலையடி வால விக்னேஸ்வரர் ஆலய வருடாந்த மஹோற்சவம் எதிர்வரும் 29ஆம் தேதி வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின்றது.

 வரலாற்றில் முதல் தடவையாக 69 லட்சரூபாவில் பாரிய தேர் ஒன்று ஆலயத்தின் முன்னாள் பிரதம குரு அமரர் சிவஸ்ரீ  சண்முரெத்தினம் குருக்கள் குடும்பம் சார்பாக அன்பளிப்பு செய்யப்பட்டிருக்கின்றது . அமரர் சிவஸ்ரீ சண்முகரெத்தினம் குருக்கள் இவ்வாலயத்தில் பல வருடகாலம் பிரதம குருக்களாக நிறைந்த சேவையாற்றியவர் என்பதும் அவரது சிரேஸ்ட புதல்வர்  சிவஸ்ரீ சண்முக மகேஸ்வரக்குருக்கள் தற்போது இவ் ஆலயத்தின் பிரதம குருவாக இருக்கிறார் . அவர் வடக்கு கிழக்கில் பிரபலமான குருக்கள் என்பதும்  குறிப்பிடத்தக்கது.

அந்த தேரின் வெள்ளோட்டம் 6 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை இடம்பெறும். அதேவேளை மறுநாள் 7 ஆம் தேதி சனிக்கிழமை கன்னித் தேரோட்டம் இடம் பெறும்.

ஆலய பிரதம குரு சிவ ஸ்ரீ சண்முக மகேஸ்வரக் குருக்கள் தலைமையில் இந்த மஹோற்சவம் இடம்பெற இருக்கின்றது.

29ஆம் தேதி வியாழக்கிழமை காலை 7 மணிக்கு காரைதீவு மாவடி ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்திலிருந்து கொடிச்சீலை சம்பிரதாயபூர்வமாககொண்டுவரப்பட்டு கொடியேற்றப்படும்.

 செப்டம்பர்  1ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கண்ணகி அம்மன் ஆலயத்தில் இருந்து பாற்குட  பவனி இடம்பெறும்.

பத்து நாள் தேர்த்திருவிழா உற்சவம் தொடர்ச்சியாக இடம்பெற இருக்கின்றது .

தேரோட்டம் செப்டம்பர் 7ஆம் தேதி சனிக்கிழமை காலை 8 மணிக்கு இடம்பெற இருக்கிறது .மறுநாள் எட்டாம் தேதி ஞாயிற்றுக்கிழமை சமுத்திர தீர்த்தோற்சவம் இடம்பெறும் என்று ஆலய பரிபாலன சபைத் தலைவர் இ. தவராஜா தெரிவித்தார் .


உற்சவ காலங்களில் தினமும் காலை 9 மணிக்கு பூஜை வசந்த மண்டப பூஜை மாலை 6  மணிக்கு பூஜை வசந்த மண்டப பூஜை திருவிழா வெளிவீதியுலா மற்றும் மாலை 6:30 மணிக்கு நற்சிந்தனையும் இடம் பெறும்  என்று அவர் மேலும் தெரிவித்தார்.