ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது - 01ஆம் திகதி தீர்மானிக்கப்படும்




 


வி.சுகிர்தகுமார்  

 ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பில் இதுவரையில் தீர்மானம் எட்டப்படவில்லை என தெரிவித்த தமிழரசுக்கட்சியை பிரதிநிதித்துவம் செய்யும் அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் த.கலையரசன் பொது வேட்பாளர் தொடர்பில் மக்களின் கருத்திற்கேற்பவே செயற்படுவோம் எனவும் கூறினார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் எதிர்வரும் 01ஆம் திகதி இடம்பெறும் கட்சியின் மத்திய செயற்குழுக்கூட்டத்தில் ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும். அத்தீர்மானமும் மக்களின் கருத்திற்கமையவே எடுக்கப்படும்.
அத்தோடு தமிழ் மக்களின் அபிலாசைகளை புரிந்து கொண்டு செயற்படக்கூடிய பிரதான வேட்பாளர்களுடன் பேசி வருகின்றோம். இவர்களின் யார் அவற்றை தீர்த்துவைக்கக்கூடிய  அல்லது நல்ல செய்தியினை சொல்கின்றார்களோ அவரையே நம் தலைவராக தெரிவு செய்ய வேண்டும் எனவும் கூறினார்.
பொது வேட்பாளராக களம் இறக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசு கட்சியின் மூத்த உறுப்பினராக இருக்கின்ற அரியேந்திரன் அவர்களை நான் மதிக்கின்றவன். ஆனாலும் அவர் தொடர்பில் மக்கள் மத்தியில் அதிகமாக பேசப்படவில்லை. இந்நிலையில் கடந்த கால அனுபவங்களையும் அம்பாரை மாவட்ட மக்களுக்கு ஏற்படுத்தப்பட்ட அநீதிகளையும் கவனத்தில் கொண்டு நாம் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என கட்சி தீர்மானிக்கின்றதோ அவருக்கே மக்கள் வாக்களிக்க எதிர்பார்த்திருக்கின்றனர் என்றார்.
எதுவாக இருப்பினும் மக்களின் எதிர்பார்ப்பிற்கு மாறாக கட்சி செயற்படாது எனவும் உறுதிபட குறிப்பிட்டார்.