கடமையேற்பு!




 


மாளிகைக்காடு நிருபர்


இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக முகாமைத்துவ வர்த்தக பீடத்தின் பீடாதிபதியாக பணியாற்றிய கலாநிதி எஸ். சபீனா எம்.ஜி.எச். அவர்களின் பதவிக்காலம் நிறைவடைந்துள்ள நிலையில் குறித்த பீடாதிபதி வெற்றிடத்துக்காக கடந்த 2024 .06.28 ஆம் திகதியன்று இடம்பெற்ற தெரிவுப் போட்டியில் பீடத்தின் உயர் சபை உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவுடன் பேராசிரியர் கலாநிதி ஏ.எம்.எம். முஸ்தபா பீடாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

முகாமைத்துவ வர்த்தக பீடத்தின் பீடாதிபதியாக  பேராசிரியர் கலாநிதி ஏ.எம்.எம். முஸ்தபா மற்றும் முகாமைத்துவ துறையின் துறைத்தலைவராக பேராசிரியர் கலாநிதி எம்.ஏ.சி. சல்பியா உம்மா, நிதி மற்றும் கணக்கியல் துறையின் துறைத்தலைவராக சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.ஏ.சி.என்.ஷபானா ஆகியோர் தங்கள் கடமைகளை உபவேந்தர் பேராசிரியர் கலாநிதி ரமீஸ் அபூபக்கர் முன்னிலையில் ஏற்றுக்கொள்ளும் நிகழ்வு 2024.07.01 ஆம் திகதி முகாமைத்துவ வர்த்தக பீடத்தில் இடம்பெற்றது.

தென்கிழக்கு பல்கலைக்கழக வரலாற்றில் (Alumni) முன்னாள் மாணவர்களில் ஒருவர், பீடம் ஒன்றின் பீடாதிபதியாக தெரிவு செய்யப்படுவது இது நான்காவது சந்தர்ப்பமாகும். முதலாவதாக தற்போதைய உபவேந்தர் பேராசிரியர் கலாநிதி றமீஸ் அபூபக்கரும் இரண்டாவதாக கலை கலாசார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் கலாநிதி எம்.எம். பாஸில் மூன்றாவதாக இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபுமொழி பீட பீடாதிபதி சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.எச்.ஏ. முனாஸ் ஆகியோர் தெரிவாகி இருந்தனர். அதேவேளை இன்று துறைத்தலைவர்களாக கடமைகளை பெறுப்பேற்ற இருவரும் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் (Alumni) முன்னாள் மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கு கருத்துத் தெரிவித்த புதிய பீடாதிபதி பேராசிரியர் முஸ்தபா, தான் Infrastructure and Faculty Development, Student Engagement and Academic Enrichment, Faculty Support and Institutional Development என்ற மூன்று அம்சங்கள் கொண்ட அபிவிருத்தி திட்டங்களை மூன்று வருடத்தில் எட்டும் நோக்கில் குறித்த பணியை கையில் எடுத்துள்ளதாகவும் இதற்கு சம்மந்தப்பட்டவர்களின் ஆதரவு அவசியம் என்றும் தெரிவித்தார்.

இன்றைய கடமையேற்பின் மூலம் அடுத்த மூன்று வருட காலப்பகுதிக்கு முகாமைத்துவ வர்த்தக பீடத்தின் பீடாதிபதியாக பேராசிரியர் முஸ்தபாவும் பதவியேற்ற துறைத்தலைவர்களும்  பணியாற்ற இருப்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய நிகழ்வில் பிரதம அதிதியாக உபவேந்தர் பேராசிரியர் கலாநிதி ரமீஸ் அபூபக்கர் கலந்துகொண்டதுடன் கௌரவ அதிதிகளாக  கலை கலாசார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் கலாநிதி எம்.எம். பாஸில் , இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபு மொழி பீட பீடாதிபதி சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.எச்.ஏ. முனாஸ், பொறியியல் பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் கலாநிதி எம்.ஏ.எல். அப்துல் ஹலிம், நூலகர் எம்.எம்.றிபாவுடீன், பதில் பதிவாளர்   எம்.ஐ.நௌபர் உள்ளிட்டவர்களுடன் முகாமைத்துவ வர்த்தக பீடத்தின் பேராசிரியர்கள் துறைத்தலைவர்கள் விரிவுரையாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.