மாணிக்கங்கையில் முதலை கடித்து ஒருவர் பலி! பெரஹராவில் யானை குழப்பம் !! பாதுகாப்பு இல்லையா?




 


( கதிர்காமத்திலிருந்து வி.ரி. சகாதேவராஜா)

கதிர்காமம் மாணிக்கங்கையில் நீராடிய ஒருவர் முதலை கடித்து ஸ்தலத்திலேயே பலியாகினர் .

இச்சம்பவம் கொடியேற்ற தினமான நேற்று(6) சனிக்கிழமை மாலை இடம் பெற்றுள்ளது.

சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது..

நேற்று மாலை 5.30 மணியளவில் கொடியேற்றம் இடம்பெற்று முதலாவது பெரஹரா பெரிய ஊர்வலத்திற்காக மக்கள் தயாராகிக் கொண்டிருந்த வேளையில் பலர் மாணிக்க கங்கையில் நீராடிக் கொண்டிருந்தார்கள்.
 அப்பொழுது அங்கிருந்த முதலை நீராடிய ஒருவரை கடித்து குதறி இருக்கின்றது .

சற்று வேளையில் அங்கு வந்த போலீசாரின் மீட்பு அணியினர்(rescue mission) உடன் பாய்ந்து அங்கே கம்பியால் குத்தி அதற்குரிய நடவடிக்கை எடுத்த பொழுது இவர் மேலே மிதக்க காணப்பட்டார். பின்பு அவரது சடலம் கதிர்காமம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.
அவர் மட்டக்களப்பைச்சேர்ந்த நடுத்தர வயதுடையவர் என ஆரம்ப தகவல்கள் தெரிவிக்கின்றன.
 பின்னால் அவரது மனைவி உறவினர்கள் அங்கு அழுதழுது சென்றார்கள் .

 இதேவேளை, நேற்று முதலாவது பெரஹராவில் கலந்து கொண்ட இரண்டு யானைகள் குழப்பம் விளைவித்தன. முதல் நாளில் லட்சம் மக்கள் பெரஹரா பார்க்க வந்திருந்தனர். யானைகள் மதங் கொண்டு ஓடி குழப்பம் விளைவித்தன.

இதனால் மக்கள் பீதியோடு கலைந்து ஓடினர். பிள்ளைகள் ஓலமிட்டனர். பலர் முண்டியடித்துக் கொண்டு வெளியேறினர்.
அதன்போது சிலருக்கு காயமும் ஏற்பட்டது.

இவ்வாறான சம்பவங்கள் கதிர்காமம் செல்லும் அடியார்களின் மனதிலே ஒருவித அச்சத்தை உண்டு பண்ணும்.

 லட்சக்கணக்கான மக்கள் ஒன்றுகூடும் இப் புனித பூமியில் இவ்வாறான சம்பவங்கள் இடம் பெற அனுமதிக்ககூடாதென்று பலரும் கருத்து தெரிவித்தனர்.

 எனவே கதிர்காம நிர்வாகம் இதற்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கேட்கின்றனர் .

அந்த புனித பூமியிலே மக்களுக்கான பாதுகாப்பையும் அவர்கள் வழங்க வேண்டும் என்றும் மக்கள் கேட்டுக் கொண்டார்கள்.