பட்டம்பிட்டி திட்ட முகாமைத்துவ குழு விவசாயிகளின் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வு





 நூருல் ஹுதா உமர்


சம்மாந்துறை நீர்ப்பாசன பொறியியலாளர் காரியாலய பிரிவுக்குட்பட்ட 14 விவசாய அமைப்புக்களின் சம்மேளனமான பட்டம்பிட்டி திட்ட முகாமைத்துவ குழு ஏற்பாடு செய்த சம்மாந்துறை பிரதேச புதிய நீர்ப்பாசன பொறியியலாளருக்கான வரவேற்பும், கௌரவிப்பும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நெய்னா காடு  பிரதேசத்தில் பட்டம்பிட்டி திட்ட முகாமைத்துவ குழுவின் தலைவரும், திருகோணமலை மாவட்ட பிரதம உள்ளக கணக்காய்வாளருமான ஏ.எல். மஹ்ரூப் தலைமையில் இடம்பெற்றது.

சம்மாந்துறை பிரதேச நீர்ப்பாசன பொறியியலாளராக பொறுப்பேற்றிருக்கும் எந்திரி ஆர்.வேல் கஜன் அவர்களையும் காரியாலய அதிகாரிகளையும் வரவேற்று கௌரவித்த இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும், முன்னாள் இராஜாங்க அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

மேலும் இந்நிகழ்வில் கிழக்கு மாகாண பிரதிப்பிரதம செயலாளர் (நிர்வாகம்) எம்.எம். மன்சூர் மற்றும் கிழக்கு மாகாண பிரதிப்பிரதம செயலாளர் (நிதி) ஏ.எம்.எம். றபீக் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து கொண்டனர். இதன்போது சம்மாந்துறை நீர்ப்பாசன பொறியியலாளர் காரியாலய பிரிவுக்குட்பட்ட 14 விவசாய அமைப்புக்கள் மற்றும் விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை கலந்துரையாடிய விவசாயிகள் அவற்றுக்கான தீர்வை பெற்றுத் தர  வேண்டிய விடயங்களையும் எடுத்துரைத்தனர்.

இந்நிகழ்வில் சம்மாந்துறை நீர்ப்பாசன பொறியியலாளர் காரியாலய உத்தியோகத்தத்தார்கள், விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.