கல்லரிப்பு பழங்குடி மாணவர்களுக்கு கல்வி வழங்க வாகனம் ஏற்பாடு





 ( வி.ரி.சகாதேவராஜா)


வாகரை பிரதேசத்தில் உள்ள வெருகல் கல்லரிப்பு பழங்குடிக் கிராம மாணவர்களுக்கு கல்வி வசதி வழங்க வள்ளுவம் அமைப்பு முன்வந்துள்ளது.

 கல்லரிப்பு பழங்குடி கிராமத்தில் பாடசாலை இல்லை. மூன்று கிலோமீட்டர் தொலைவில் மாவடிச்சேனை மற்றும் வெருகல் பாடசாலைகள் உள்ளன.இம் மாணவர்கள் அங்கு சென்று தான் கல்வி பயில வேண்டிய நிலை உள்ளது.

அதனால் அங்குள்ள மாணவர்கள் மாதக்கணக்கில்  பாடசாலைக்கு செல்லாமல் இருந்து வந்தனர்.

 இந்த நிலையை உணர்ந்த வள்ளுவம் அமைப்பு தினமும் காலையில் அம் மாணவர்களை மாவடிச்சேனை  பாடசாலைக்கு கொண்டு செல்ல வாகன வசதியை வழங்கி உள்ளது. அதேபோன்று பாடசாலை முடிந்ததும் அவர்களை கிராமத்தில் கொண்டு செல்லவும் அந்த ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது.

 பல மாத காலமாக பாடசாலை செல்லாதிருந்த அந்த மாணவர்களுக்கு வள்ளுவம் அமைப்பு ஏற்படுத்தி கொடுத்த இந்த வாகன வசதி அவர்களுக்கு கல்வி வாசனையை மீண்டும் ஊட்ட வாய்ப்பு அளித்தது .
இதற்காக கிராம மக்கள் வள்ளுவம் அமைப்புக்கு பலத்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றார்கள்.