சம்மாந்துறை அல் மர்ஜான் மகளிர் கல்லூரி ஆய்வு கூட அபிவிருத்திக்கு, நிதி ஒதுக்கீடு





 (மாளிகைக்காடு, நாவிதன்வெளி செய்தியாளர்கள்)

முன்னாள் இராஜாங்க அமைச்சரும், திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவர் சட்டத்தரணி எச்.எம். முகம்மட் ஹரீஸ் அவர்களின் முயற்சியின் பயனாக பாராளுமன்ற உறுப்பினரின் டி-100 வேலைத்திட்டத்தின் கீழ் ஜனாதிபதியின் விசேட நிதி ஒதுக்கீட்டில் பயனாக சம்மாந்துறை கல்வி வலய சம்மாந்துறை கமு/சது/ அல் மர்ஜான் முஸ்லிம் மகளிர் கல்லூரி ஆய்வு கூட மேம்பாட்டுக்கு இன்று (24) நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட ஆவணம் கையளிக்கப்பட்டது.
கமு/சது/ அல் மர்ஜான் முஸ்லிம் மகளிர் கல்லூரி அதிபர் எச்.எம். அன்வர் அலி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு முன்னாள் இராஜாங்க அமைச்சரும், திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவர் சட்டத்தரணி எச்.எம். முகம்மட் ஹரீஸ் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு ஒன்றரை மில்லியன் ரூபாய்க்கான நிதி ஒதுக்கீட்டு ஆவணத்தை கையளித்தார்.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரின் செயலாளர் நௌபர் ஏ பாபா, வெகுஜன மக்கள் தொடர்பாடல் செயலாளர் நூருல் ஹுதா உமர், பாடசாலை பிரதி உதவி அதிபர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர்கள் சங்கத்தினர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.