உகந்தமலை ஸ்ரீ முருகன் ஆலயத்தில்





  கலியுகத் தெய்வமாம் முருகப் பெருமான் மன உகந்து பதி கொண்டு எழுந்தருளிய உகந்தைப் பதியானது இப்பூவுலகிலுள்ள சிறப்பு பெற்ற புண்ணிய தலங்களுள் முக்கிய தலமாக  அடியார்களினால் போற்றியும் வழிபடப்பட்டும் வருகின்றது.

இவ்வாறு வரலாற்றுப் பெருமையும், புகழும் கொண்டு விளங்கும் இலங்கைத் திருநாட்டின் கிழக்கு மாகாணத்தில் தென்கோடியில் நானிலங்களும் சமுத்திரமும் சூழப்பெற்ற இயற்கை எழில் கொண்ட அருள்மிகு உகந்தமலை ஸ்ரீP முருகன் ஆலயத்தின் வருடாந்த ஆடிவேல் மஹோற்சவ கொடியேற்றப் திருவிழா ஆயிரக்கணக்கான அடியார்கள் மத்தியில் இன்று  (06) இடம்பெற்றது.
லாகுகல பிரதேச செயலாளர் நவனீதராஜாவின் கண்காணிப்பின் கீழ் ஆலய தலைவர் சுதுநிலமே திசாநாயக்க தலைமையில் பிரதம குரு சிவாகமகிரியாயோதி, ஈசானசிவச்சாரியார் சிவஸ்ரீ க.கு.சீதாராம் குருக்கள் உள்ளிட்ட குருமார்களின் வேதாகம கிரியைகளுடன்  ஆரம்பமான மூலவர் மற்றும் வசந்த மண்டப பூசை வழிபாடுகளை தொடர்ந்து கொடியேற்றம் இடம்பெற்றது.
கொடியேற்ற நிகழ்வில் அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேவிக்ரம போக்குவரத்து நெடுஞ்சாலைகள் அமைச்சின் மேலதிக செயலாளர் வி.ஜெகதீசன் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
இன்று ஆரம்பமான ஆடிவேல் விழாவானது 15 நாட்கள் இடம்பெறுகின்ற விசேட பூஜை வழிபாடுகளுடனும் 22 ஆம் திகதி இடம்பெறுகின்ற ஆடிவேல் தீர்த்தோற்வசத்துடனும் நிறைவறும்.
இதேவேளை ஆயிரக்கணக்கான அடியவர்கள் உகந்தை முருகனின் கொடியேற்றத்தின் பின்னர் கதிர்காமத்திற்கான பாதயாத்திரையை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.