பாடசாலைகளுக்கான நிர்மாண பணி நிதி மற்றும் விளையாட்டுக்கழகங்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு





 வி.சுகிர்தகுமார் 

 அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஆலையடிவேம்பு பிரதேச அபிவிருத்திக் குழுத்தலைவருமான டபிள்யு.டி வீரசிங்கவின் 2024 ஆம் ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்யப்பட்ட பாடசாலைகளுக்கான நிர்மாண பணி நிதி மற்றும் விளையாட்டுக்கழகங்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வும் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் ஒதுக்கீட்டிலிருந்து மதஸ்தலங்களுக்கு வழங்கப்பட்ட நிதி வழங்கும் நிகழ்வும் நேற்று (22) ஆலையடிவேம்பு பிரதேச செயலக கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.
ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஆலையடிவேம்பு பிரதேச அபிவிருத்திக் குழுத்தலைவருமான டபிள்யு.டி வீரசிங்க பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் அம்பாரை மாவட்ட இணைப்பாளர் சந்திரகுமார் ஆலையடிவேம்பு இணைப்பாளர் நவனீதன் பாராளுமன்ற உறுப்பினரின் செயலாளர் வசந்த ஆலையடிவேம்பு பிரதேச இணைப்பாளர் கிந்துஜா உள்ளிட்ட அரச அதிகாரிகள் ஆலய நிருவாகத்தினர் விளையாட்டுக்கழகங்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது புனரமைப்பு வேலைத்திட்டங்களுக்கான காசோலைகள் வழங்கப்பட்டதுடன் விளையாட்டுக்கழகங்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் பாடசாலைகளுக்கான உபகரணங்கள் என பல்வேறு வேலைத்திட்டங்களுக்கான பொருட்கள் கையளிக்கப்பட்டன.
இதேநேரம் சோலார் பவர் இணைப்பினுள் உள்வாங்கப்படாத ஆலயங்கள் இரண்டாம் கட்டத்திற்குள் இணைத்துக்கொள்ளப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் வீரசிங்க தெரிவித்தார்.
இந்நிலையில் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் பல இலட்சம் ரூபாவினை அம்பாரை மாவட்டத்திற்கென ஒதுக்கி பல அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக அவரது இணைப்பாளர் குறிப்பிட்டார்.