"கல்வி சிறக்கும் வழி திறக்கும் விழா"






 மாளிகைக்காடு செய்தியாளர்


கல்முனை கல்வி வலய மாளிகைக்காடு கமு/கமு/ சபீனா முஸ்லிம் வித்தியாலய "கல்வி சிறக்கும் வழி திறக்கும் விழா" பாடசாலை அதிபர் எம்.ஐ.எம். அஸ்மி தலைமையில் இன்று (01) பாடசாலை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான எம்.சி. பைசால் காசிம் பிரதம அதிதியாக கலந்து கொண்டு தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து நிர்மாணிக்கப்பட்ட புதிய அதிபர் காரியாலயம் மற்றும் பாதை என்பவற்றை திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் கல்முனை வலயக்கல்வி பணிப்பாளர் எம்.எஸ். சஹிதுல் நஜீம் கௌரவ அதிதியாக கலந்து கொண்டதுடன் மேலும் நிர்வாக பிரதி கல்வி பணிப்பாளர் எம்.எச். ஜாபீர், காரைதீவு கோட்டக்கல்வி அதிகாரி ஏ. சஞ்சீவன், வலயக் கல்வி அலுவலக அதிகாரிகள், ஓய்வு பெற்ற கல்வி அதிகாரி சட்டத்தரணி எம்.சி. ஆதம்பாவா, மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் தலைவர் ஏ.பௌசர், செயலாளர் நூருல் ஹுதா உமர், சாய்ந்தமருது மற்றும் காரைதீவு கல்விக்கோட்ட அதிபர்கள், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரமுகர்கள் உட்பட பாடசாலை பிரதியதிபர், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழுவினர் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான எம்.சி. பைசால் காசிம் அவர்களின் கல்விச் சேவையை பாராட்டி பாடசாலை சமூகம் பொன்னாடை போத்தி கௌரவித்ததுடன் கல்வியில் சாதித்த மாணவர்களுக்கும் அதிதிகளால் கௌரவிக்கப்பட்டனர்.