அம்பாறை மாவட்ட 1112 மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கி வைப்பு




 


பாறுக் ஷிஹான்


இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் மாண்புமிகு  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின்  எண்ணக்கருவிற்கு அமைய கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக பொருளாதார பின்னடைவை எதிர்நோக்குகின்ற திறமையுடைய 100000 மாணவர்களுக்கும் க.பொ.த உயர்தர மாணவர்கள் 6000 பேருக்கும் புலமைப்பரிசில் வழங்கும் தேசிய வேலைத்திட்டத்திற்கு இணையாக நடைபெறும் அம்பாறை மாவட்ட புலமைப்பரிசில் வழங்கும் வைபவம் அக்கரைப்பற்று ஏ.எல்.எம். அதாவுல்லாஹ் அரங்கத்தில் இன்று  (17) இரண்டு கட்டங்களாக இடம்பெற்றது.

இதற்கமைய காலை ஒரு அமர்வு அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். ஜெகராஜன் தலைமையிலும்  நண்பகல் மற்றுமொரு அமர்வு அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக்க அபேவிக்கிரம தலைமையிலும்   இரு பிரிவுகளாக சிறப்பாக நடைபெற்றன.

 அபிவிருத்தி லொத்தர் சபையின் அனுசரணையில்  நடைபெற்ற மேற்படி நிகழ்வில்   அம்பாறை  மாவட்ட ஒருங்கிணைப்பு குழு இணைத்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான  ஏ.எல்.எம். அதாவுல்லாஹ்    மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின்   பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன்  உள்ளிட்டோர் பிரதம அதிதிகளாக பங்கேற்றிருந்தனர்.

இந் நிகழ்வில் ஜனாதிபதி செயலகத்தின் பிரதிநிதிகள், மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள்,   மாவட்ட செயலக உயரதிகாரிகள்,பிரதேச செயலாளர்கள், கல்வியதிகாரிகள் மற்றும் மாணவர்கள், மாணவர்களது பெற்றோர் என பெருந்திரலானோர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது கல்முனை ,சம்மாந்துறை, அக்கரைப்பற்று, திருக்கொவில், கல்வி வலயத்திற்குட்பட்ட பொருளாதார பின்னடைவை எதிர்நோக்குகின்ற திறமையுடைய 872  தரம் ஒன்று தொடக்கம் தரம் 11 வரை கல்வி கற்கும் மாணவர்களுக்கும் க.பொ.த உயர்தர மாணவர்கள் 240 பேருக்கும்  அதிதிகளினால் புலமைப்பரிசில்கள் இதன் போது வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.