பாராட்டும் கௌரவிப்பும்




 


(எஸ்.அஷ்ரப்கான்,சியாத் எம்.இஸ்மாயில், றியாஸ் ஆதம், பாறூக்  ஸிஹான்)


நிந்தவூர் ரோஸ் றீனா நிறுவனத்தின் சமூக சேவைப்பிரிவின் ஏற்பாட்டில் சமூக நலன்புரி அமைப்புக்களின் ஊடாக அர்ப்பணிப்பு மிக்க சேவைகளை சமூகத்திற்காக முன்னெடுத்த நலன்புரி அமைப்புக்களை பாராட்டிக்  கெளரவிக்கும் நிகழ்வு சனிக்கிழமை (22) நிந்தவூர் அழகாபுரி தனியார் விடுதியில் இடம்பெற்றது.

ரோஸ் றீனா சமூக சேவைகள் அமைப்பின் ஸ்தாபகரும், முகாமைத்துவப் பணிப்பாளரும், சமூக ஆர்வலருமான ஏ.ஜே.ஜனுபர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முன்னாள் இராஜாங்க அமைச்சின் செயலாளரும், தேசிய எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் உறுப்பினரும், சம்மாந்துறை மஜ்லிஸ் சூரா அமைப்பின் தலைவருமான எம்.ஐ.அமீர் (நழிமி) பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்தார்.

நிந்தவூர் மற்றும் சாய்ந்தமருது பிரதேச செயலாளர்களான ஏ.எம்.அப்துல் லத்திப், எம்.எம்.ஆசிக் மற்றும் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை மற்றும் நிந்தவூர் ஆதார வைத்தியசாலை ஆகியவற்றின் வைத்திய அத்தியட்சகர்களான டொக்டர் ஏ.எல்.எப்.ரஹ்மான், டொக்டர் எம்.பீ.ஏ.அப்துல் வாஜித், நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் கே.எல்.எம்.ரயிஸ், கல்முனை உதவிக் கல்விப் பணிப்பாளரும் நிந்தவூர் ஜும்மா பள்ளிவாசல் தலைவருமான எம்.ஏ.எம்.றசீன் ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்பு அதிதிகளாகவும் கலந்துகொண்டனர்.

இவ்வமைப்பினால் முதற்கட்டமாக அம்பாறை மாவட்டத்தில் அர்ப்பணிப்பு மிக்க சமூக சேவைகளை முன்னெடுத்த நலன்புரி அமைப்புக்கள், சமூக சேவையாளர்கள் பாராட்டி நினைவு சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

எதிர்காலத்தில் மேலும் பல சமூக சேவை அமைப்புக்கள் அமைப்பின் பிரதிநிதிகள் இவ்வமைப்பினால் பாராட்டி கௌரவிக்கப்பட உள்ளதோடு, சமூகப் பரப்பில் காணப்படுகின்ற சமூக விரோத செயற்பாடுகளை களைவதற்கும் சிறுவர்கள், இளைஞர்கள் செல்லுகின்ற பாதையினை  ஒழுங்கமைப்பதற்குமான பணியிலே  ரோஸ் றீனா சமூக சேவை பிரிவு போன்று அனைத்து சமூக சேவை அமைப்புகளும் ஒன்றிணைந்து செயல்படுவதற்கான அழைப்பினை ரோஸ் றீனா சமூக சேவை  அமைப்பின் ஸ்தாபகர் சமூக ஆர்வலர் ஏ.ஜே. ஜனுபர்  விடுத்திருந்தார்.