அக்கரைப்பாக்கியனின் வாழ்வியல் பயணம் எனும் நூல் வெளியீட்டு விழா





வி.சுகிர்தகுமார் 0777113659  



 அக்கரைப்பற்று தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில் ஊடகவியலாளர் செ.பேரின்பராசாவினால் தொகுக்கப்பட்ட பாவாணர் அக்கரைப்பாக்கியனின் வாழ்வியல் பயணம் எனும் நூல் வெளியீட்டு விழா கோளாவில் பெருநாவலர் வித்தியாலய மண்டபத்தில் நேற்று (08) மாலை இடம்பெற்றது.
அக்கரைப்பற்று தமிழ்சங்கத்தின் தலைவரும் ஓய்வு நிலை பிரதிக்கல்விப்பணிப்பாளருமான வா.குணாளன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் கலந்து கொண்டதுடன் கௌரவ அதிதியாக பாராளுமன்ற முன்னை நாள் உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் கலந்து கொண்டார்.
விசேட அதிதியாக தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் அனுசியா சேனாதிராஜா வைத்தியர் சித்திரா தேவராஜன் ஓய்வு நிலை அதிபர் க.கோபாலபிள்ளை தமிழ்சங்கத்தின் முன்னாள் தலைவர் க.இரத்தினவேல் உள்ளிட்டவர்களும் பங்கேற்றனர்.
நிகழ்வில் தமிழ்த்தாய் வாழ்த்தினை ஆசிரியை சாமந்தி டினேஸ் வழங்க வரவேற்புரையினை தமிழ்ச்;சங்க செயலாளர் வி.சிவன்செயலும் தலைமையுரையினை தலைவர் வா.குணாளனும் வழங்கினர்.
நூல் அறிமுகத்தை பிரதேச செயலாளரும் பாராளுமன்ற முன்னாள் உறுப்பினரும் இணைந்து செய்து வைத்ததுடன் நூலாளர் பாவாணர் அக்கரைப்பாக்கியனிடம் இருந்து நூலின் பிரதிகளை பெற்றுக்கொண்டனர். தொடர்ந்து அதிதிகளின் கரங்களினால் முதல் நூலினை விரிவுரையாளர் கலாநிதி ச.புவனேந்திரன் சார்பாக அவரது சகோதரர் ஆசிரியர் பிரதீபன் பெற்றுக்கொண்டார்.
நூல் அறிமுக உரையினை திருக்கோவில் ஆசிரியர் வளநிலைய முகாமையாளரும் தமிழ்ச்சங்கத்தின் உபதலைவருமான ந.சுதாகரன் வழங்க நூல் நயவுரையினை ஓய்வுநிலை அதிபர் க.தவராசாவும் வழங்கினர்.
நிகழ்வில் ஆசிரியை ஜெகதாரணியினால் நெறியாள்கை செய்யப்பட்ட நடனம் இடம்பெற்றதுடன் நூலாளர் அக்கரைப்பாக்கியன் மற்றும் பிரதேச செயலாளர் பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஆகியோர் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர். அத்தோடு நூலாளர் அக்கரைப்பாக்கியன் அவர்களிடம் கல்விகற்ற பழைய மாணவர்களும் நூலாளரை பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்.
இறுதியாக அதிதிகளின் உரை இடம்பெற்றதுடன் இங்கு உரையாற்றிய பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் க.கோடீஸ்வரன் பேரினவாதிகளாலும் பேரின சமூகத்தாலும் தமிழர்களின் அடையாளங்கள் இல்லாதொழிக்கப்படுவதாக குற்றம் சுமத்தினார்.
இதனை முறியடிக்க வேண்டுமெனில் தமிழர்கள் ஒற்றுமைப்படவேண்டும் என்றார். அத்தோடு இவ்வாறான முக்கியத்துவமான நூல்களை வெளியிடும் அக்கரைப்பற்று தமிழ்ச்சங்கத்தை பாராட்டினார்.