மாதிரிச் சித்திரைப் புத்தாண்டு விழா




 


நூருல் ஹுதா உமர்


இனங்களுக்கு இடையில் சமாதானத்தையும் புரிந்துணர்வையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தும் வகையில் கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் தரம் இரண்டு மாணவர்களின் மாதிரிச் சித்திரைப் புத்தாண்டு விழா பாடசாலை அதிபர் ஏ.ஜி.எம்.றிசாத் தலைமையில் இடம்பெற்றது.

ஆரம்ப பிரிவு தலைவரின் வழிகாட்டலில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்குப் பிரதம அதிதியாக கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலையின் அதிபர் எஸ். கலையரசன் அவர்களும், விசேட அதிதியாக அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளர் ஏ.ஜே.எல்.பாஸில் அவர்களும், சிறப்பு அதிதியாக கல்முனைப் பொலிஸ் நிலையத்தின் சிறுவர் பெண்கள் குற்றப்பிரிவு  பொறுப்பதிகாரி பெண் பொலிஸ் பரிசோதகர் திருமதி. ஏ.எம்.எச்.சீ. அபேரட்ண அவர்களும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வின் மூலம் பௌத்த, இஸ்லாமிய, இந்து மற்றும் கிறிஸ்தவ மதத்தவர்களின் கலை,கலாசாரங்கள், உடை மற்றும் உணவுவகைகள் என பல வகையான விடயங்களை மாணவர்கள் அறியக்கூடிய வாய்பை ஏற்படுத்துவதோடு பிற மதங்களை மதிக்கும் மனப்பாங்கினையும் ஏற்படுத்துகின்றன.

அத்தோடு இவ்விழாவில் புத்தாண்டு விளையாட்டுக்களும், பல் மத உணவு வகைகளும் மாணவர்களால் பரிமாறப்பட்டதுடன் போட்டி நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை  அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் நலன்விரும்பிகள் எனப் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.