கிழக்கு மாகாண ஏழு துறைகளுக்கான அமைச்சின் செயலாளராக கலாநிதி கோபாலரத்தினம் நியமனம்!




 


(வி.ரி.சகாதேவராஜா)


கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி , நீர்ப்பாசனம், மோட்டார் வாகன போக்குவரத்து , கட்டிடங்கள் நிருமாணம், வீடமைப்பு, கிராமிய மின் இணைப்பு, நீர் விநியோகம் ஆகிய ஏழு துறைகளுக்கான அமைச்சின் செயலாளராக. கலாநிதி மூ.கோபாலரத்தினம்(மூகோ) நியமிக்கப்பட்டுள்ளார்.

கிழக்கு மாகாண ஆளுநர் எம்.செந்தில் தொண்டமான் இந்த நியமனத்தை நேற்று  (24) திங்கட்கிழமை பிற்பகல் 2 மணியளவில் அவரது அலுவலகத்தில் வைத்து வழங்கியுள்ளார்.

 கிழக்குமாகாணத்தில் ஆளுநர் மேற்கொண்ட அதிரடி  உயர்நிருவாக மாற்றத்தில் ஓரங்கமாக இவரது நியமனம் இடம்பெற்றுள்ளது.

ஏனைய செயலாளர்களுக்கும் நியமனக் கடிதங்களை ஆளுநர் வழங்கி வைத்தார்.

இலங்கை நிருவாக சேவை விசேட தர அதிகாரியான இவர், ஏலவே  கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி காணி அபிவிருத்தி திறன் விருத்தி மகளிர் அபிவிருத்தி நீர் விநியோக துறை அமைச்சின் செயலாளராக பணியாற்றி வந்தார்.

அதற்கு முன்னதாக கிழக்கு மாகாண சபையின் பொதுச் சேவை ஆணைக்குழு மற்றும் பேரவைச் செயலாளராக கடமை புரிந்துவந்தார்.அ
தற்குமுன்னர் திறைசேரி முகாமைத்துவ திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகமாக சேவையாற்றியிருந்தார்.
மட்டக்களப்பு செட்டிபாளையத்தினை பிறப்பிடமாக கொண்ட இவர், மூத்ததம்பி செல்லம்மா தம்பதியினரின் புதல்வராவார். தற்போது கல்முனையில் வாழ்ந்துவருகிறார்.

1995 ஆம் ஆண்டு இலங்கை நிருவாக சேவை அதிகாரியாக  தெரிவுசெய்யப்பட்ட இவர், தனது  ஆரம்பக் கல்வி தொடக்கம் உயர்தரம் வரை செட்டிபாளையம் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்றார். கலைமாணி பட்டத்தினை பேராதனை பல்கலைக் கழகத்திலும், பொதுநிருவாக துறையில் முதுமானிப் பட்டத்தினை இந்தியா பல்கலைக் கழகத்திலும் பெற்றார்.

இவர், தம்பலகாமம், ஏறாவூர் நகர் ,பட்டிப்பளை, கல்முனை மற்றும் சம்மாந்துறை ஆகிய பிரதேச செயலகங்களில் உதவி பிரதேச செயலாளராகவும், குச்சவெளி, நாவிதன்வெளி,திருக்கோயில் மற்றும் களுவாஞ்சிகுடி  பிரதேச செயலகங்களில் பிரதேச செயலாளராகவும் பணியாற்றி மக்களின் நன்மதிப்பைப்பெற்றிருந்தார்.

கல்முனை லயன்ஸ்கழக தலைவராகவிருந்த லயன் கோபாலரெத்தினம், பல சமுகசேவைகளில் முன்னின்று சேiவாயற்றிவருபவராவார். சிறந்த ஒரு கலைஞரான இவர் பிரபல மேடைகளில் பழையபாடல்களைப்பாடி அசத்தியிருக்கிறார்.