பாதயாத்திரீகர்களுக்கு விசேட மருத்துவ முகாம்





 ( வி.ரி.சகாதேவராஜா)


யாழ். செல்வச் சந்நிதி கதிர்காம பாதயாத்திரை குழுவினருக்கு கல்லடி இராமகிருஷ்ண மிஷன் ஏற்பாட்டில் விசேட மருத்துவ முகாம் கல்லடி விபுலானந்த மணி மண்டபத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது.  

மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷன் பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தா ஜீ மகராஜ் ஏற்பாட்டில் உதவி பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி சுரர்ச்சிதானந்தா ஜீ மகராஜ் முன்னிலையில் இவ் விசேட மருத்துவ முகாம்  மிசன் சிவபுரியில் நடைபெற்றது.

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் இரா.முரளீஸ்வரன் தலைமையில் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ரி.நவலோஜிதன் டாக்டர் ரி.வாமதேவன் உள்ளிட்ட மருத்துவர்கள்  பாதயாத்திரை குழுவினருக்கு சிகிச்சை அளித்தனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து புறப்பட்டு ஒரு மாதகாலம் பாதயாத்திரை பூர்த்தி செய்த நிலையில் இம் மருத்துவமுகாம் பெரிதும் உதவியது. இ.கி.மிசனின் இவ் ஜீவசேவைக்கு மனமார்ந்த நன்றிகள் என்று பாதயாத்திரை குழுத் தலைவர் ஜெயாவேல் சாமி தெரிவித்தார்.

அவ்வமயம் காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் ,முன்னாள் பட்டிப்பளை மேற்கு பிரதேச சபை தவிசாளர் சிவஞானம் அகிலேஸ்வரன் ,உதவி கல்விப்பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா, ஓய்வு நிலை ஆசிரியர் கவிமாமணி சாமி.புண்ணியமூர்த்திஆகியோர் கலந்துகொண்டனர்.


சுமார் 75 யாத்திரீகர்கள் இம் மருத்துவமுகாமில் பயன்பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


நேற்று குழுவினர் களுதாவளையில் தரித்திருந்தனர்.