கொடியேற்ற விழா





 (நூருல் ஹுதா உமர்)


சாஹுல் ஹமீது வலியுல்லாஹ் நாயகம் அன்னவர்களின் நினைவாக அம்பாறை மாவட்ட கல்முனை மாநகர மக்களால் ஒவ்வொரு வருடமும் நடாத்திவரும் கல்முனை கடற்கரை பள்ளிவாசல் நாஹூர் ஆண்டகை தர்ஹாவில் 202 வது கொடியேற்று விழா இன்று (14)  ஆரம்பமானது.

கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் மற்றும் கடற்கரை பள்ளிவாசல் நாஹூர் ஆண்டகை தர்ஹா ஷரீபின் தலைவர் டாக்டர் எஸ். எம். ஏ . அஸீஸ் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது. 
 
கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆப் பெரிய பள்ளிவாயலில் இருந்து புனித கொடியானது உலமாக்கள், பக்கீர் ஜமாஅத்தினர், நிருவாகிகள், ஊர்மக்கள் புடைசூழ தீன் கலிமா முழக்கத்துடன் ஊர்வலமாகச் சென்று கடற்கரை பள்ளிவாசல் நாஹூர் ஆண்டகை தர்ஹா மினாராக்களில் ஏற்றி வைக்கப்பட்டது .

 கொடியேற்று தினத்தில் இருந்து தொடர்ந்து 12 நாட்களுக்கும் பாதுஷா சாஹுல் ஹமீது வலியுல்லாஹ் நாயகம் (கத்தஸல்லாஹு சிர்ரஹுல் அஸீஸ்) அன்னவர்களின் மீதான புனித மெளலித் ஷரீப் பாராயணம், பக்கீர் ஜமாஅத்தினரின் புனித றிபாஈ றாதிப், உலமாப் பெருமக்களின் சன்மார்க்கச் சொற்பொழிவு என்பன இடம்பெறவுள்ளதோடு கொடியிறக்கு தினமான எதிர்வரும் டிசம்பர் 26 ஆம் திகதி நிறைவடையவுள்ளதுடன் அன்றைய தினம் மாபெரும் கந்தூரி அன்னதானம் வழங்கி வைக்கப்படவுள்ளது. 

நாட்டின் பல பகுதிகளில் இருந்து பொது மக்கள் இவ் கொடியேற்ற விழாவை பார்வையிட வருகை தந்ததை காணமுடிந்தது

இந் நிகழ்வில் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி. ஜெகதீசன், கல்முனை பிரதேச செயலாளர் ஜே. லியாக்கத் அலி, கல்முனை மாநகர சபை ஆணையாளர் ஏ.எல்.எம். அஸ்மி, கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் டி.எச்.டி எம் எல் புத்திக, கல்முனை கடற்படை பொறுப்பதிகாரி தம்பிக ஏகனாயக்க, கல்முனை பொலிஸ் நிலைய தலைமை பொறுப்பதிகாரி எம்.ரம்சீன் பக்கீர், கல்முனை மாநகர சபை பிரதி முதல்வர் ரஹ்மத் மன்சூர், கல்முனை பிரதேச செயலக அதிகாரிகள், கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர்களான விரிவுரையாளர் ஏ.கலிலுல் ரஹ்மான், ஏ.எம் ரியாஸ், உட்பட நாகூர் ஆண்டகை தர்ஹா சரிப் நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.