சுனாமி ஒத்திகை





 நூருல் ஹுதா உமர் 


அம்பாரை மாவட்ட செயலகமும், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையமும், சாய்ந்தமருது பிரதேச செயலகத்துடன் இணைந்து நடத்திய சுனாமி ஒத்திகை பயிற்சி நிகழ்வு இன்று (14) சாய்ந்தமருது கமு/கமு/ அல்-ஜலால் வித்தியாலயத்தில் நடைபெற்றது. 

இதன் போது சுனாமி ஒன்று ஏற்படும் என்ற உறுதி செய்யப்பட்ட தகவல் கிடைத்தால் மாணவர்களும், பாடசாலை ஆளணியினரும் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்ற பயிற்சி அளிக்கப்பட்டது. அவற்றில் சுனாமி தொடர்பான அறிவுத்தல் கிடைக்கும் போது அவசர ஒன்றுகூடல் இடத்தில் ஒன்றுகூடவும் அங்கிருந்து பாதுகாப்பான இடத்துக்கு மாணவர்களை கொண்டு சேர்ப்பதும் என்றவாறான செயற்பாடு இடம்பெற்றது. இதில் மாணவர்கள் பாடசாலையில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு சாய்ந்தமருது ஜூம்ஆப் பெரியபள்ளிவாசலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். 

சாய்ந்தமருது பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் எம்.ஐ. முவாபிக்கா மற்றும் அம்பாரை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய பிரதிப் பணிப்பாளர் எம்.எஸ்.எம். றியாஸ் அவர்களினது மேற்பார்வையில் நடைபெற்ற இச்செயற்பாட்டில் அனர்த்த முகாமைத்துவ மாவட்ட உத்தியோகத்தர் ஏ.எல்.எம். அல்தாப் மற்றும் பிரதேச செயலக அனர்த்த முகாமைத்துவத்திற்கான உத்தியோகத்தர்கள் ஆகியோர் மாணவர்களுக்கான வழிகாட்டல்களை வழங்கினார்கள். 

UNDP இன் நிதி அனுசரணையில் நடைபெற்ற இச்செயற்பாட்டில் பாடசாலை அதிபர் எம்.ஐ.எம். சைபுதீன், பிரதி அதிபர் டீ.கே.எம். சிராஜ் மற்றும் அனர்த்த முகாமைத்துவத்துவத்திற்க்கு பொறுப்பான ஆசிரியர்களான யூ.கே. முபாறக் மற்றும் ஏ.எம்.எம். ஸாஹிர் ஆகியோர் பாடசாலை சார்பான திட்டமிடல்களை மேற்கொண்டிருந்தனர். மேலும் இந்நிகழ்வில் பாடசாலை ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்கள், மாணவர்களின் பெற்றோர்கள், மாணவர்கள், இராணுவத்தினர், கடற்படையினர் மற்றும் பொலிஸாரும் கலந்து கொண்டனர்.