பேராசிரியர்களுக்கு கௌரவம்





 நூருல் ஹுதா உமர்


இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அறபு மொழிப் பீடத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் பேராசிரியர்களான எஸ்.எம்.எம். மஸாஹிர், ஆர்.ஏ.சர்ஜூன் ஆகியோரை கௌரவிக்கும் நிகழ்வும் பீடத்தின் ஆரம்பம் முதல் இன்றுவரை கடமையாற்றிய பீடாதிபதிகளின் படங்களை ஞாபகார்த்த நிமிர்த்தம் காட்சிப்படுத்தும் நிகழ்வும் பீடாதிபதி, எம்.எச்.ஏ. முனாஸ் தலைமையில் 2023.11.30 ஆம் திகதி பீடத்தின் கேட்போர் கூடத்திலும் கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.

நிகழ்வுக்கு பிரதம அதிதியாக இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் ரமீஸ் அபூபக்கர் கலந்து கொண்டதுடன் 
வரவேற்புரையை சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.எச்.எம். நைறூஸ் அவர்கள் நிகழ்த்தினார்.

பீடாதிபதி, எம்.எச்.ஏ.முனாஸ் தனது தலைமையுரையில் கௌரவிக்கப்பட்ட பேராசிரியர்களை வாழ்த்தியதுடன் பல்கலைக்கழகத்துக்கும் பீடத்துக்கும் அவர்கள் ஆற்றிய பணிக்காக நன்றியும் தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றியபோது தற்போது முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கியுள்ள பல்வேறு சவால்களை எடுத்துக் கூறியதுடன் அவைகளுக்கு தீர்வுக்கான புத்திஜீவிகள் ஒன்றுபட்டு செயலாற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இங்கு பேராசிரியர் எஸ்.எம்.எம். மஸாஹிர், பேராசிரியர் ஆர்.ஏ.சர்ஜூன் ஆகியோர் தங்களது உரைகளின் போது இவ்வாறான அடைவுகளை தாங்கள் பெற்றுக்கொள்ள உதவிய அத்தனைபேருக்கும் நன்றி தெரிவித்தனர்.

உபவேந்தர் பேராசிரியர் ரமீஸ் அபூபக்கர் அவர்கள் தனது உரையில், கல்வியாளர்கள் தாங்கள் உயர்வு ஒன்றை பெற்றவுடன் அனைத்தும் முடிந்து விட்டது என்று விட்டுவிடாது அவர்களது ஆராய்ச்சி பணிகளை இன்னும் உத்வேகத்துடன் தொடரவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். தென்கிழக்குப் பல்கலைக்கழக இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபு மொழிப் பீடத்தில் மாணவரிடேயே உடை அணியும் விடயத்தில் நல்லதொரு முன்மாதிரி ஏற்பட்டுள்ளதைக் கண்டு பூரிப்படைவதாகவும் தெரிவித்தார்.

நன்றியுரையை உதவிப்பதிவாளர் எஸ். பிரசாந்த் நிகழ்த்தினார்.

இந்நிகழ்வில் தென்கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எம்.எம். பாஸில், தொழில்நுட்ப பீடத்தின் பீடாதிபதி கலாநிதி யு.எல். அப்துல் மஜீத், வர்த்தக முகாமைத்துவ பீடத்தின் பீடாதிபதி கலாநிதி எஸ். சபீனா எம்.ஜி.எச்., சிரேஷ்ட பேராசிரியர் றமீஸ் அப்துல்லாஹ், நூலகர் எம்.எம். ரிபாய்தீன், பல்கலைக்கழக ஊடக பிரிவின் இணைப்பாளர் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எப்.எச்.ஏ.ஷிப்லி, பீடத்தின் ஏனைய முதுநிலை விரிவுரையாளர்கள், விரிவுரையாளர்கள், உதவி விரிவுரையாளர்கள், கல்விசாரா உத்தியோகத்தர்கள், பீடத்துக்கு புதிதாக இணைந்து கொண்ட மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது