மாணவ பாராளுமன்ற தேர்தல்




 


நூருல் ஹுதா உமர்


கல்வி அமைச்சின் புதிய சுற்று நிருபம் மற்றும் அறிவுறுத்தல் கோவையின் அடிப்படையில் மாணவர் பாராளுமன்ற தேர்தல் முறைமை பாடசாலை மட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. இதனடிப்படையில் தேர்தல்கள் திணைக்களமும் கல்வியமைச்சும் இணைந்து பாடசாலைகள் தோறும் மாணவர் பாராளுமன்றங்களை அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.

அம்பாறை மாவட்டம் கல்முனை கல்வி வலயத்திற்கு உட்பட்ட சாய்ந்தமருது கமு/கமு/ அல்- ஹிலால் வித்தியாலயத்தில் 2023ம் ஆண்டிற்கான மாணவர் பாராளுமன்றம் அமைப்பதற்கான வேட்பு மனுக்கள் கோரப்பட்டு தெரிவுக்கான தேர்தல் இன்று பாடசாலை அதிபர் யூ.எல்.நஸார் தலைமையில் பாடசாலை வளாகத்தில் இடம்பெற்றது.

தேர்தல் ஆணையாளர் பாடசாலை அதிபர், தேர்தல் நடவடிக்கைகளுக்கான இணைப்பாளர்களாக பிரதி அதிபர், உதவி அதிபர், உதவி தேர்தல் அலுவலகர், சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலகர் பகுதிக்கு பொறுப்பான ஆசிரியர்கள், கனிஷ்ட தலைமை தாங்கும் அலுவலகர், மேற்பார்வை அலுவலகர், கண்காணிப்பு அலுவலகர் ஆகியோர் தேர்தல் கடமைகளுக்கான உத்தியோகபூர்வ அடையாள அட்டை அதிபர் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டதுடன் தேர்தல் திணைக்களத்திலிருந்து பெறப்பட்ட வாக்குப்பெட்டி, மாதிரி வாக்குச்சீட்டுகளை கொண்டு தேர்தல் நடைபெற்றது.

இந்த பாடசாலை மாணவர் பாராளுமன்றத்துக்கு 60 மாணவர் பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கு 450க்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதுடன் வாக்களிக்கும் பணிகள் 10:00 பி.ப - 12:30 பி.ப வரை இடம்பெற்றது. மிக அமைதியான முறையில் மிக நீண்ட வரிசைகளில் நின்று தமது வாக்குகளை ஆர்வமாக பதிவு செய்து சென்றதனை காணக்கூடியதாக இருந்தது. அத்துடன் நடைபெற்ற பாடசாலை மாணவ தேர்தல் முறையானது தங்களுக்கு புதுவிதமான அனுபவத்தை தந்ததாகவும் இதன் மூலம்தேர்தல் தொடர்பான தங்களது அறிவையும் ஆளுமையையும் அதிகரிக்க முடிந்ததாகவும் மாணவர்கள் தெரிவித்தனர்.

தெரிவு செய்யப்படும் மாணவ பிரதிநிதிகளைக் கொண்டு மாணவர் பாராளுமன்றம் தாபிக்கப்படும். இதில் சபாநாயகர்,  பிரதமர், 10 அமைச்சர்கள், 10 பிரதி அமைச்சர்கள் என இத்தேர்தலின் ஊடக தெரிவு செய்யப்படவுள்ளனர். வாக்குப் பெட்டிகள் அனைத்தும் வாக்கெண்னும் நிலையத்திற்கு பி.ப 01:00 மணிக்கு கொண்டு வரப்பட்டதுடன்  வாக்கு எண்னும் பணிகள் நடைபெற்றதையும் காணக்கூடியதாக இருந்தது.