கல்முனை இளைஞர்களின் முன்மாதிரியான செயற்பாடு




 




கல்முனை இளைஞர்களின் முன்மாதிரியான செயற்பாடு-மக்கள் பாராட்டு 

பாறுக் ஷிஹான்

கல்முனை மட்டக்களப்பு பிரதான வீதியில் பேரூந்து தரிப்பிடமாக ஒன்றரை வருடமாக   சேதமடைந்து  காணப்பட்ட நிழற்குடையினை கல்முனை இளைஞர்களின் முயற்சியின் பலனாக திருத்தி அமைக்கப்பட்டு மக்களின் பாவனைக்காக மீண்டும் வழங்கியுள்ள செயற்பாடு மக்கள் மத்தியில் பாராட்டு பெற்றுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் குறித்த நிழற்குடை தொடர்பில் சமூக ஊடகங்களின் வாயிலாக கல்முனை வாழ் இளைஞர்கள் பாவனைக்கு உதவாத நிழற்குடையை திருத்துவது யார் என குறிப்பிட்டு விமர்சனங்களை வெளியிட்டிருந்தனர்.

இந்த நிழற்குடையில் அண்மையில் உள்ள கல்முனை ஆதார வைத்தியசாலை மற்றும் அருகில் உள்ள பாடசாலை உள்ளிட்ட அரச தனியார் ஊழியர்கள் பாவித்து வந்திருந்த போதிலும் அந்நிழற்குடை பாவனைக்கு உகந்த நிலையில் இல்லாமல் உடைந்து காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கமைய குறித்த நிழற்குடை நிலைமையினை சமூக ஊடகங்களில் கண்டு வெளிநாடுகளில் இருந்த தங்கள் நண்பர்களின் உதவியுடன் அந்நிழற்குடையை திருத்தி அமைத்து செவ்வாய்க்கிழமை(18) மக்கள் பாவனைக்கு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இதற்காக உதவி செய்த லண்டனின் வசிக்கும் நண்பருக்கும்   சகநண்பர்களுக்கும் களத்தில் நின்று அனைத்து வேலைகளையும் செய்து முடித்து தந்த ஒவ்வொருவருக்கும்  குறித்த செயற்பாட்டிற்கு  அனுமதியினை பெற்று கொடுத்த  வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தொழிநுட்ப உதவியாளருக்கும்  அதன் நிறைவேற்று பொறியியலாளருக்கும் கல்முனை இளைஞர்கள் நன்றிகளை தெரிவித்துள்ளனர்.