கஜமுத்துக்களை விற்பனை செய்ய முயன்ற இளைஞன் கைது





 பாறுக் ஷிஹான்



யானை கஜமுத்துக்கள் இரகசியமாக விற்பனை செய்ய முயன்ற இளைஞனை திருக்கோவில் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

அம்பாறை மாவட்டம் கல்முனை புறநகர் பகுதியில் அமைந்துள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் வெள்ளிக்கிழமை(3) இரவு  சந்தேகத்திற்கிடமாக ஒருவர் நடமாடுவதாக இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றினை அடுத்து திருக்கோவில் விசேட அதிரடிப்படையினர் குறித்த இளைஞனை கைது செய்தனர்.

இதன் போது கைதான சந்தேக நபர் வசம் இருந்து சுமார் 4 யானை தந்தத்திற்குள் இருக்கின்ற கஜமுத்துக்கள்  விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த கஜமுத்துக்களை தன் வசம் வைத்திருந்தவர் என  கைது செய்யப்பட்ட இளைஞன் 29  வயது மதிக்கத்தக்கவர் எனவும் திருகோணமலை கந்தளாய் பகுதியை சேர்ந்தவர்  என வும்  விசேட அதிரடிப்படையினரின் விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

மேலும் கைது செய்யப்பட்ட நபர் உள்ளடங்கலாக  சான்று பொருட்கள் யாவும் சம்மாந்துறை பகுதியிலுள்ள ஜீவராசிகள் திணைக்கள பிரிவிடம் மேலதிக விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.