எமது சிறுவர்களை பலப்படுத்துவோம்




(க.கிஷாந்தன்)

தைரியமாக முன்னோக்கிச் செல்வதற்கு எமது சிறுவர்களை பலப்படுத்துவோம் எனும் தொனிப்பொருளில் உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு பத்தனை ஸ்ரீபாத தேசிய கல்வியற் கல்லூரியின் ஏற்பாட்டில் பாடசாலை மாணவர்கள் அடங்கிய ஊர்வலம் ஒன்று 22.10.2018 அன்று காலை இடம்பெற்றது.

பத்தனை சந்தியிலிருந்து ஸ்ரீபாத தேசிய கல்வியற் கல்லூரி வளாகம் வரை சென்ற இந்த ஊர்வலத்தில் தமிழ் மற்றும் சிங்கள மொழி பாடசாலை மாணவர்கள் 100 பேர் உள்ளடங்கிய ஸ்ரீபாத தேசிய கல்வியற் கல்லூரியின் நிர்வாகிகள், பீடாதிபதி, உப பீடாதிபதி, விரிவுரையாளர்கள், ஆசிரியர்கள், கல்வியற் கல்லூரியின் மாணவர்கள், பத்தனை பொலிஸார் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் “சிறுவர்களை சமூகத்தின் நற்பிரஜையாக உருவாக்குவது நம் ஒவ்வொருவரினதும் கடமையாகும், ஓவியமான மழலைகளின் கனவுகளுக்கு உயிர் கொடுப்போம், நல்ல விருட்சங்களை உருவாக்க சிறுவர் எண்ணங்களில் விதை விதைப்போம் போன்ற பதாதைகளையும் ஏந்திய வண்ணம் சென்றமையை காணக்கூடியதாக இருந்தது.

இதனையடுத்து ஸ்ரீபாத தேசிய கல்வியற் கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வுகளில் சிறுவர் உரிமை தொடர்பில் கை அச்சு இடும் நிகழ்வுடன், வருகை தந்த பாடசாலை மாணவர்களுக்கு பரிசில்களும், பாடசாலை உபகரணங்களும் வழங்கப்பட்டதோடு, கலை, கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றமை குறிப்பிடதக்கது.