ஸ்ரீபாத கல்லூரியை மூடுங்கள், தொடர்ந்து நோய்வாய்ப்பட்டால்






(க.கிஷாந்தன்)
கொட்டகலை பத்தனை ஸ்ரீபாத தேசிய கல்வியியற் கல்லூரியில் உணவு விஷமானது காரணமாக கொட்டகலை வைத்தியசாலையில் 68 பேர் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் சிகிச்சையின் பின் 58 பேர் மீண்டும் திரும்பியதாகவும், 10 பேர் மாத்திரம் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருவதாகவும் இவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என்னும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
இதனைத் தொடர்ந்து கல்லூரியின் சமையலறையினை பொது சுகாதார உத்தியோகஸத்தர் மாவட்ட சுகாதார பரிசோதகர்கள் பொலிஸார் ஆகியோர் இணைந்து பரிசோதித்துள்ளனர். இந்த பரிசோதனையில் உணவு விஷமாகியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதுடன் தொடர்ந்தும் ஆசிரியர் பயிற்றுநர்கள் நோய்வாய்ப்பட்டால் கல்லூரியை சில தினங்களுக்கு மூடுமாறு அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.
ஸ்ரீபாத கல்வியியற் கல்லூரியில் 23.10.2018 அன்றைய தினம் சிறுவர் தினம் நிகழ்வு ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த சிறுவர் தின நிகழ்வில் ஆசிரிய பயிலுநர்கள் சுமார் 500 பேர் பங்குகொண்டுள்ளனர்.
இதில் வழங்கப்பட்ட உணவு விஷமாகி இருப்பதாக சந்தேகம் தெரிவிக்கப்படுகின்றது. இதனை தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்ட பொது சுகாதார உத்தியோகத்தர் மற்றும் சுகாதாரப் பிரிவினர் இந்த உணவு விஷமானதன் காரணமாக முதலாம் வருட மாணவர்களே இருப்பதாகவும், கல்லூரி நிகழ்வின் பின் இறுதியாகவே இவர்கள் உணவு உட்கொண்டது தெரியவந்துள்ளது.
குறித்த நிகழ்வின் பின் இவர்களுக்கு பிரைட் ரைஸ் வழங்கப்பட்டதாகவும், அந்த பிரைட் ரைஸ் இறுதியாக சாப்பிட்டவர்களுக்கு மணம் வீசியதாகவும் எனினும் அதனை பொருட்படுத்தாது தாங்கள் உட்கொண்டதாகவும்  பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
23.10.2018 அன்றைய தினம் இந்த கல்லூரியில் பயிலும் ஆசிரியர் மாணவர்களுக்கு திடீரென வாந்தி, வயிற்றோட்டம், வயிறு வலி ஆகியன ஏற்பட்டதன் காரணமாக காலை 10 மணியளவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அனுமதிக்கப்பட்டவர்களில் 5 ஆண்களும், 63 பெண்களும் என  பொலிஸார் மேலும் தெரிவித்தனர்
இது குறித்த மேலதிக விசாரணைகளை திம்புள்ள பத்தனை பொலிஸார் மற்றும் சுகாதார பிரிவினரும்  மேற்கொண்டு வருகின்றனர்.