ரசாயன தயாரிப்புபெருநிறுவமான மான்சாண்டோ, க்ளைபோசேட் என்ற ரசாயனம் கொண்ட பூச்சிக்கொல்லியால் தான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டதாக கூறும் நபருக்கு 289 மில்லியன் டாலர்கள் இழப்பீடு வழங்க நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது .
தங்களது பூச்சிக்கொல்லி தயாரிப்புகள் ஆபத்தானவை என தெரிந்தும் இது குறித்து மான்சாண்டோ நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்க தவறிவிட்டதாக கலிஃபோர்னியா நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
க்ளைபோசேட்(glyphosate) என்ற ரசாயனம் புற்றுநோயை உண்டாக்கும் என்று குற்றச்சாட்டுப்படும் வழக்கு விசாரணைக்கு வருவது இதுவே முதல்முறை.
க்ளைபோசேட் புற்றுநோயை உண்டாக்கும் என்பதை மான்சாண்டோ நிறுவனம் மறுத்துள்ளது மேலும் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்போவதாகவும் மான்சாண்டோ தெரிவித்துள்ளது.
சான் பிரான்ஸிஸ்கோவில் நீதிமன்றம் இதை தவறாக புரிந்து கொண்டது என தீர்ப்புக்கு பிறகு பேசிய மான்சாண்டோவின் துணைத் தலைவர் ஸ்காட் பார்ட்ரிஜ் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கை தொடந்த டேவேயின் ஜான்சன் அமெரிக்கா முழுவதும் இம்மாதிரியான புகார்களை தெரிவித்துள்ள 5000பேர்களில் ஒருவர்.
இந்த தீர்ப்பு மான்சாண்டோவுக்கு எதிராக ஜெர்மன் நிறுவனமான பேயர் நிறுவனம் எழுப்பியுள்ள நூற்றுக்கணக்கான புகார்களுக்கு முன்னோடியாக இருக்கும் என பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார்.
கடந்த 2014ஆம் ஆண்டு ஜான்சனுக்கு வெள்ளை அணுக்களில் உருவாகும் புற்றுநோய் இருப்பதாக கண்டறியப்பட்டது.
கலிஃபோர்னியாவில் உள்ள பள்ளி ஒன்றில், விளையாட்டு மைதானங்களில் புல் தரைகளை பராமரிக்கும் நபராக ஜான்சன் பணிபுரிந்தபோது மான்சாண்டோவின் பூச்சிக் கொல்லி தயாரிப்பை பயன்படுத்தியதாக ஜான்சனின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு விசாரணை எட்டு வார காலமாக நடைபெற்றது, மான்சாண்டோவிற்கு எதிரான ஆதாரங்கள் அதிகப்படியாக இருந்ததை இந்த தீர்ப்புக் காட்டுகிறது என பாதிக்கப்பட்டதாக கூறப்படும் ஜான்சனின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
"நீங்கள் சரியாக இருக்கும்போது வெற்றிப் பெறுவது சுலபமானது" மேலும் எதிர்காலத்தில் மான்சாண்டோவிற்கு எதிரான வழக்குகளுக்கு இந்த தீர்ப்பு ஒரு எடுத்துக்காட்டாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
ஜான்சன் மற்றும் அவரது குடும்பத்தினர் குறித்து "வருந்துவதாக" தெரிவித்த மான்சாண்டோ நிறுவனம், 40ஆண்டுகாலமாக தனது தயாரிப்பு மிகவும் பாதுகாப்பானதாக உள்ளது என்பதை தொடர்ந்து தீவிரமாக வலியுறுத்தப்போவதாக தெரிவித்துள்ளது.
மேலும் இன்றைய தீர்ப்பானது அமெரிக்க சுற்றுச் சூழல் பாதுகாப்பு முகமை, உலகெங்கும் உள்ள அமெரிக்க சுகாதார தேசிய நிறுவனங்கள் மற்றும் ஒழுங்குமுறை அதிகாரிகள், க்ளைஃபோசேட் புற்றுநோயை உண்டாக்காது என்று கூறிய 800 ஆய்வு முடிவுகள் பொய் என்பதை நிரூபிக்காது என்றும் ஜான்சனுக்கு இதனால் புற்றுநோய் வரவில்லை என்றும் மான்சாண்டா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
க்ளைபோசேட், உலகளவில் பரவலாக பயன்படுத்தக்கூடிய பூச்சிக் கொல்லி மேலும் அதன் பாதுகாப்பு குறித்து பல்வேறு தரப்பு வாதங்களும் நிலவுகின்றன.
2015ஆம் ஆண்டு சர்வதேச புற்றுநோய் குறித்த ஆய்வு முகமையான உலக சுகாதார நிறுவனத்தின் புற்றுநோய் முகமை, "க்ளைபோசேட் மனிதர்களுக்கு புற்றுநோயை உண்டாக்கலாம்" என தெரிவித்துள்ளது. ஆனால் சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமை க்ளைபோசேட்டை பாதுகாப்பாக பயன்படுத்தினால் அதனல் தீங்கொன்றும் நேராது என தெரிவித்துள்ளது.
ஆனால் சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமையின் இந்த முடிவில் தொழிற்சாலைகளின் தலையீடு இருப்பதாக க்ளைபோசேட்டுக்கு எதிரான பிரசாரக்காரர்கள் தெரிவிக்கின்றனர்.
Post a Comment
Post a Comment