(அப்துல்சலாம் யாசீம்)
திருகோணமலை மொறவெவ காட்டுப்பகுதிக்குள் தேன் எடுப்பதற்காக சென்ற நபரொருவரை கரடி தாக்கி காயப்படுத்திய நிலையில் இன்றைய தினம் (11) திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு கரடி தாக்குதலுக்குள்ளானவர் திருகோணமலை ரொட்டவெவ பகுதியைச்சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான ஜலால்தீன் ஜாபீர் (35வயது) எனவும் தெரியவருகின்றது.
குறித்த நபர் ரொட்டவெவயிலிருந்து மொறவெவ காட்டுப்பகுதிக்கு சக நண்பர்களுடன' தேன் எடுக்கச்சென்ற போது செல்வதற்கு முன்னரே அவருடன் சென்றவரை குளவி தாக்கியதாகவும் அதனையடுத்து வீட்டுக்கு செல்வதற்கு ஆயத்தமாகுமாறு அப்பயணத்தில் சென்ற முதியவரொருவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை அவரின் பேச்சை கேட்காமல் வந்ததற்காக தேன் எடுத்து விட்டே செல்வோம் என கூறிவிட்டு காட்டுக்குள் உள்ளே சென்ற வேளை கரடி மரத்திற்கருகில் மறைந்திருந்து தாக்கியதாகவும் அதிகளவில் கண் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
படுகாயமடைந்த நபரை 20 கிலோமீட்டருக்கும் அதிகளவான காட்டுப்பகுதியிலிருந்து கொண்டு வந்ததையடுத்து அவர் உடனடியாக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டார்.
அதேவேளை அவரது கண்ணில் பாரிய காயம் ஏற்பட்டிருப்பதினால் மேலதிக சத்திர சிகிச்சைக்காக கண்டி போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை பேச்சாளரொருவர் தெரிவித்தார்.
Post a Comment
Post a Comment