இராஜங்க அமைச்சர் விஜயகலாவை, விசாரணை முடியும் வரை நீக்குக!




தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்ட இலங்கையின் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்தவருமான விஜயகலா மகேஸ்வரனை இராஜாங்க அமைச்சர்பதவியிலிருந்து விசாரணைகள் முடியும்வரை விலக்கி வைக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கைவிடுத்துள்ளார்.

கோப்புப் படம்படத்தின் காப்புரிமைGETTY IMAGES
Image captionகோப்புப் படம்

இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் திங்கள்கிழமையன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில், இன்றைய சூழலில் தமிழீழ விடுதலை புலிகளை உருவாக்கவேண்டும் என்பதே எங்களுடைய முக்கிய நோக்கம் என சர்ச்சையான கருத்தை தெரிவித்திருந்தார்.
இவரின் கருத்து இலங்கை அரசியல் அரங்கில் பலத்த சர்சையை ஏற்படுத்தியுள்ளது. இந் நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை இலங்கை நாடாளுமன்றம் கூடிய போது விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்தினால் பெரும் அமளி ஏற்பட்டது. அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கையும் கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்டது.
இதன் காரணமாக சபையில் அமைதியின்மை ஏற்பட்டது. இதனால் தொடர்ந்து நாடாளுமன்ற அமர்வுகளை நடத்திச் செல்வதற்கு தடை ஏற்பட்டதால் நாளை காலை வரை அவையை ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்தார்.
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் இராஜாங்க அமைச்சர் ஒருவர், நாட்டில் தடை செய்யப்பட்ட இயக்கம் ஒன்று மீள உருவாக்கப்பட வேண்டும் என கருத்து வெளியிட முடியாது எனவும், இது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனக்கு அறிவுறுத்தியதாக சபாநாயகர் கரு ஜயசூரியா தெரவித்தார்.

இலங்கைபடத்தின் காப்புரிமைMARK WILSON

இதேவேளை இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக இலங்கை பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடொன்றை முன்வைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக சிங்கள ராவய அமைப்பினர் தெரிவித்துள்ள்ளனர்.
தமிழீழ விடுதலை புலிகளுக்கு ஆதரவாகவும் பயங்கரவாதத்தை தூண்டும் வகையிலும் அவரது கருத்துக்கள் அமைந்துள்ளது என கூறியே இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக சிங்கள ராவய அமைப்பினர் பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடொன்றினை முன்வைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதேவேளை "விடுதலை புலிகளின் இயக்கம் மீண்டும் தோற்றம் பெற வேண்டும் என விஜயகலா மகேஸ்வரன் குறிப்பிட்டமையை ஐக்கிய தேசிய கட்சி வன்மையாக கண்டிக்கிறது. அத்துடன் இப்பிரசாரம் தொடர்பில் அவரே உத்தியோகப்பூர்வ விளக்கத்தினை விஜயகலா மகேஸ்வரன் வழங்குவார்" என ஐக்கிய தேசிய கட்சியின் அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
"தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழ வேண்டுமாயின் விடுதலைப் புலிகளின் இயக்கம் மீண்டும் தலைதூக்க வேண்டும் என்று விஜயகலா மகேஷ்வரன் குறிப்பிட்டுள்ளமையானது தற்போது நாட்டில் பாரிய மாறுப்பட்ட கருத்துக்களை ஏற்படுத்தியுள்ளது. எவ்வாறு இருப்பினும் இவரது கருத்துக்களை ஐ.தே.க. வன்மையாக கண்டிக்கின்றது. "தெற்கில் ஹிட்லரையும், வடக்கில் பிரபாகரனையும் உருவாக்கும் நோக்கம் நல்லாட்சி அரசாங்கத்திற்கு ஒருபோதும் கிடையாது" என்றார் ஹரின் பெர்ணான்டோ.
இதுதொடர்பாக, விஜயகலா மகேஸ்வரனின் கருத்துக்களைப் பெற முயற்சித்தபோது, அவரைத் தொடர்பு கொள்ள இயலவில்லை