ஈரானிய மீன்பிடிக் கப்பல் ஒன்றினூடாக பாகிஸ்தானிலிருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டுவரப்பட்ட 110 கோடி ரூபா பெறுமதியான 110 கிலோ ஹெரோயின் போதைப் பொருளுடன் தொடர்புடைய இலங்கையர் ஒருவர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தெஹிவளை ஆசிரி பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட குறித்த நபர் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வரும்போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
அதேவேளைஇ தென் கடலிலும் நீர்கொழும்பு பகுதியிலும் வைத்து கைது செய்யப்பட்ட 14 வெளி நாட்டு சந்தேக நபர்களும் பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
கோட்டை நீதிவான் நீதிமன்றில் பெற்றுக்கொண்ட விஷேட தடுப்புக் காவல் உத்தரவுக்கு அமைவாகவே அவர்கள் அனைவரும் 7 நாள் தடுப்புக் காவல் உத்தர்வின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
கடந்த முதலாம் திகதி காலி பிரதேசத்தில் இருந்து 50 கடல் மைல் தொலைவில் ஆழ்கடலில் ஈரான் கொடியுடன் மீன் பிடியில் ஈடுபடுவதைப் போன்று பயணித்துக்கொண்டிருந்த கப்பலை பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் விஷேட குழுவும் கடற்படையின் குழுவும் சேர்ந்து கைது செய்தன. இதன் போது கப்பலில் இருந்து 10 ஈரான் பிரஜைகளும் ஒரு பாகிஸ்தான் பிரஜையுமாக 11 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 11 வயதுடைய சிறுவன் ஒருவனும் அடங்குவதாகவும் அவன் ஈரான் நாட்டை சேர்ந்தவன் எனவும் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.